மதிமுகவின் அரசியல் ஆலோசனைக் குழுவின் செயலரும், திருச்சி மாநகர் மாவட்டச் செயலருமான அ. மலர்மன்னன் (77) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காலமானார்.
திருச்சி அண்ணாமலை நகரிலுள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டிருந்தது. அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும் மலர்மன்னனின் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
மதிமுக தொடங்குவதற்கு முன்பு திமுகவில் திருச்சி 2 சட்டப்பேரவைத் தொகுதியில் 1984, 1989 ஆகிய இரு முறை வெற்றி பெற்றவர். மதிமுக தொடங்கப்பட்டபோது திருச்சி மாவட்டப் பொருளாளராக இருந்த அவர், 1996 முதல் மாநகர் மாவட்டச் செயலராகப் பொறுப்பு வகித்தார்.
இறுதிச் சடங்கு:
இறுதிச் சடங்கு தொடர்பாக மாவட்டப் பொறுப்பாளர் டிடிசி. சேரன் வெளியிட்ட அறிக்கை:
மறைந்த மலர்மன்னின் இறுதி ஊர்வலம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு அண்ணாமலை நகர் வீட்டிலிருந்து புறப்படும். மதிமுக பொதுச் செயலர் வைகோ பங்கேற்கிறார்.
பாலக்கரை முதலியார்ச் சத்திரம் ஆர்சி கல்லறைத் தோட்டத்தில் பகல் 12 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும். கட்சியினர் மாவட்டம் முழுவதும் மதிமுக கொடிகள் 3 நாள்களுக்கு அரைக் கம்பத்தில் இறக்கி மரியாதை செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலர்மன்னனுக்கு மனைவி, இரு மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.