அகில இந்திய மருத்துவக் கல்விக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வானது (நீட்) தமிழ், ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட 8 மொழிகளில் நடத்தப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வினை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் உடனடியாக அமல்படுத்தப்பட முடியாத நிலை ஏற்பட்டதால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இதையடுத்து, இந்தியா முழுவதும் அடுத்த ஆண்டு (2017-18) முதல் "நீட்' நுழைவுத் தேர்வினை கட்டாயமாக்கி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, தமிழ், ஆங்கிலம், வங்காளம், மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, ஹந்தி, அஸ்ஸாமி ஆகிய 8 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்த "நீட்' தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள், அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டுக்கும், மாநில வாரியான மருத்துவ ஒதுக்கீட்டுக்கும் தகுதி பெறுவர் எனவும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.