தமிழகத்தில் காலியாகவுள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது. இந்தக் காலியிடங்களுக்கு தேர்வு நடத்தி ஆறு மாதங்களில் முடிவுகளை அறிவிக்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) திட்டமிட்டுள்ளது.
விஏஓ தேர்வில் வெற்றி பெறுபவர்களில் பலர் குரூப் 1, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வேறு பணிகளுக்குச் செல்கின்றனர். இதனால், இந்தப் பதவியில் காலியிடங்கள் தொடர்ந்து ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது.
ஓரிரு நாள்களில் அறிவிப்பு: தமிழகத்தில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ., காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த இடங்களை நிரப்பும் வகையில் எழுத்துத் தேர்வுக்கான அறிவிக்கை ஓரிரு நாளில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்தன.