ஒரு நிமிடம் கூட பேஸ்புக் பார்க்காமல் இருக்க முடியவில்லையா?

நீங்கள் சமூக வலைதளங்களில், அதிலும் முக்கியமாக ஃபேஸ் புக்கில் தீவிரமாக
ஒரு நிமிடம் கூட பேஸ்புக் பார்க்காமல் இருக்க முடியவில்லையா?

நீங்கள் சமூக வலைதளங்களில், அதிலும் முக்கியமாக ஃபேஸ் புக்கில் தீவிரமாக இயங்குபவர்களா? உங்களுக்குத் தான் இந்த பதிவு. தயவு செய்து சிறிது நேரம் ஒதுக்கி முழுவதும் படித்துவிடுங்கள்.

நீங்கள் எழுதிய ஃபேஸ்புக் பதிவுகளை அடிக்கடி படித்தும், அதற்கு என்ன என்ன பதில்கள், விருப்பக் குறிகள் வந்துள்ளன என்பதை எல்லாம் அடிக்கடி பார்ப்பது, வண்டி ஓட்டும் போது, அலுவலக கூட்டத்தில், அல்லது பயணத்தில் என எப்போதும் எங்கும் கையில் மொபைலுடன் இருக்கிறீர்கள் எனில் உங்களுக்கே தெரியாமல் சில பிரச்னைகளை நீங்கள் விரைவில் சந்திக்கக் கூடும்.

இதனால் மனிதனின் இரண்டு மூளையின் இடையே உள்ள செயல்பாட்டுத்திறன் சமநிலையில் இருக்காது என அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியொன்றில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமான பயன்பாடோ அந்தளவுக்கு அதிகமான பாதிப்புக்கள் நிகழக் கூடும். அது அவர்களின் சிந்தனையோட்டத்திலும் அதனை தொடர்ந்து செயல்பாடுகளிலும் வெளிப்படும்.

ஃபேஸ்புக்கில் அதிக நேரம் இருக்கும்  341 மாணவர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர் ஆராய்ச்சியாளர்கள். முதல் செமஸ்டர் முடிந்த நிலையில் இந்த ஆராய்ச்சியைத் தொடங்கிய அவர்கள் ஒவ்வொரு மாணவரின் படிப்பு மற்றும் மதிப்பெண்களை அதன்பின் தொடர்ந்து ஒருவருடம் முழுவதும் கவனிக்க ஆரம்பித்தனர்.  

ஆராய்ச்சியின் முடிவில் அதிகமாக ஃபேஸ்புக் பயன்படுத்தும் மாணவர்களின் மூளையில் நடந்த மாற்றங்களால் நுண் உணர்வுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதில் 76 சதவிகித மாணவர்கள் ஃபேஸ்புக்கை வகுப்புகளிலும், 40 சதவிகிதத்தினர் வாகனம் ஓட்டும் போதும் பயன்படுத்தியிருந்தனர்.   தொடர்ந்து ஃபேஸ்புக்கில் மூழ்கி தன்னை மறந்த நிலையில் அவர்களின் நடத்தையிலும் பல மாற்றங்கள் இருந்தன. அறிவாற்றலிலும் பலவீனமான  கூறுகள் ( இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மூளையின் இரண்டு பகுதிகளுக்கான ஒத்திசைவு குறைந்துவிட்டதால், மாணவர்கள் சமன் நிலை இழந்து, பெரிய அளவில் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மாணவர்களின் மதிப்பெண்கள் மிகவும் குறைந்து அவர்களின் படிப்பும் சமூகத்தில் பழகும் தன்மையும் பாதிக்கப்படுகிறது என்றார் அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஓஃபிர் டூரில் 

மாணவர்களின் நிலை இதுவென்றால், மற்றவர்களில் 63 சதவிகித மக்கள் ஒருவருடன் மற்றவர் உரையாடிக் கொண்டிருக்கும் போது தவிர்க்க முடியாமல் தங்கள் மொபைலை பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். 65 சதவிகிதத்தினர் அலுவலக வேலை நேரத்தில் முக்கியமாக செய்ய வேண்டிய வேலை செய்வதற்கு பதில் ஃபேஸ்புக் பார்த்துக் கொண்டும், படித்துக் கொண்டும் இருக்கிறார்கள் என இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதால், மூளையின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது என்று ஆய்வுபூர்வமாக தெரிந்துவிட்டதால் அவற்றை அளவாக பயன்படுத்தும் படி மக்களுக்கு ஆய்வாளர் அறிவுறுத்தியுள்ளனர். 

இந்த ஆய்வு அறிக்கை ஜெர்னல் ஆஃப் மேனேஜ்மெண்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸில் வெளிவந்துள்ளது (Journal of Management Information Systems.

இனி அடுத்த முறை ஃபேஸ்புக்கைத் திறந்து, எத்தனை லைக்ஸ், எவ்வளவு ஷேர்ஸ், எத்தனை புதிய நட்புக் கோரிக்கை என்று பார்க்காதீர்கள்! கருவிகளுக்கு அடிமையாகாமல், மனக் கட்டுப்பாட்டுடன் அவற்றை உங்கள் தேவைகளுக்காகவும் தொழில்நுட்பமாக மட்டுமே பயன்படுத்தினால் அது வளர்ச்சிக்கான பாதையில் உங்களை அழைத்துச் செல்லும் என்பது உண்மையிலும் உண்மை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com