புதுதில்லி: நாட்டின் புகழ்பெற்ற மருத்துவ கல்வி நிலையங்களில் ஒன்றான, எய்ம்ஸின் எம்.பி.பி.எஸ் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் குஜராத் மாணவி நிஷிதா புரோஹித் முதலிடம் பெற்றுள்ளார்.
இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவ கல்வி நிலையங்களில் எய்ம்ஸும் ஒன்றாகும். இந்த எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிலையங்களில், எம்.பி.பி.எஸ் பயிலுவதற்கான நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் மே மாதம் 28-ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 2,84,737 மாணவர்கள் பங்கேற்றனர்.
தற்பொழுது அந்த தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் மாணவி நிஷிதா புரோஹித் முதலிடம் பெற்றுள்ளார். இவர் கடந்த மாதம் வெளியான +2 தேர்விலும் 91.4 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் தேர்வு எழுதிய 2.8 லட்சம் மாணவர்களில், 4,905 மாணவர்கள் மட்டுமே, அடுத்த கட்டமாக ஜூலை மாதம் நடக்க உள்ள கலந்தாய்வில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சுவாரசியமான விஷயமாக முதல் பத்து இடங்களை பிடித்திருக்கும் மாணவர்களில், 9 பேர் போட்டித் தேர்வு தயாரிப்புக்கு புகழ் பெற்ற கோட்டா நகரில் உள்ள ஒரு குறிப்பிட்ட பயிற்சி மையத்தின் மாணவர்களாவார்கள்.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை aiimsexams.org இணைய தளத்தில் காணலாம்.