இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது வங்கதேசம்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக முதல்முறையாக வெற்றியைப் பதிவு செய்த வங்கதேசம், 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 1-1 என்ற கணக்கில் சமனில் முடித்தது.
வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சாளரான மெஹதி ஹசன் மிராஸ் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 12 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை சரிவுக்குள்ளாக்கினார்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 220 ரன்களும், இங்கிலாந்து 244 ரன்களும் குவித்தன.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 24 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய வங்கதேசம் 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 31 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது.
3-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணி 66.5 ஓவர்களில் 296 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக இம்ருள் கயெஸ் 78, மகமதுல்லா 47, அல்ஹசன் 41 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷித் 4 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இங்கிலாந்து 164: இதையடுத்து 273 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணியில் டக்கெட்-அலாஸ்டர் குக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது. டக்கெட் 56 ரன்களில் வெளியேற, இங்கிலாந்தின் சரிவு ஆரம்பமானது. பின்னர் வந்த ஜோ ரூட் 1, கேரி பேலன்ஸ் 5, மொயீன் அலி 0 என அடுத்தடுத்து வெளியேற, குக் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 45.3 ஓவர்களில் 164 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து. ஒரே செஷனில் இங்கிலாந்தின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசம் தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் 6 விக்கெட்டுகளையும், ஷகிப் அல்ஹசன் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அறிமுக தொடரில் விளையாடிய மெஹதி ஹசன் ஆட்டநாயகன், தொடர் நாயகன் என இரு விருதுகளையும் தட்டிச் சென்றார்.
2000-இல் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற வங்கதேச அணி, டெஸ்ட் போட்டியில் இதற்கு முன்பு வரை ஜிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளை மட்டுமே வென்றிருந்த நிலையில், இப்போது இங்கிலாந்தை வீழ்த்தி புதிய சகாப்தம் படைத்துள்ளது. இதுவரை 95 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வங்கதேச அணிக்கு இது 8-ஆவது வெற்றியாகும்.