

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ருஷிராஜ் பரோத் (19), ஆடவர் 25 மீ. ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார்.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) இந்தப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் 25 மீ. ரேபிட் ஃபயர் பிஸ்டல் போட்டியில் ருஷிராஜ் முதலிடம் பிடித்தார். செக். குடியரசின் லூகாஸ் ஸகெளமால் வெள்ளியும், ஆஸ்திரேலியாவின் செர்கெய் எவ்க்லெவ்ஸ்கி வெண்கலமும் வென்றனர்.
ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் ருஷிராஜ் தங்கம் வெல்வது இது முதல் முறையாகும். கடந்த மே மாதம் நடைபெற்ற முதல் ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் அவர் 9-ஆவது இடம் பிடித்திருந்தார்.
இந்த வெற்றியின் மூலம், 6 போட்டியாளர்களைக் கொண்ட இறுதிச்சுற்றுக்கு 5-ஆவது நபராக ருஷிராஜ் தேர்வாகியுள்ளார்.
போட்டியின் மூன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை 6 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களுடன் பட்டியலில் 2-ஆவது இடத்தில் உள்ளது இந்திய அணி. 10 தங்கம் உள்பட 21 பதக்கங்களுடன் ரஷியா முதலிடத்தில் தொடருகிறது.
முன்னதாக, ஆடவர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் பிரதிக் போர்ஸ், அர்ஜுன் பாபுதா, பிரசாந்த் ஆகியோர் அடங்கிய அணி 1849.9 புள்ளிகளுடன் தங்கம் வென்றது. 5. மீ பிஸ்டல் பிரிவில் அன்மோல், நிஷாந்த் பரத்வாஜ், அர்ஜுன் தாஸ் ஆகியோர் அடங்கிய அணி 1600 புள்ளிகளுடன் வெள்ளி வென்றது. மகளிர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில், தில்ரீன் கில், கீதாலக்ஷ்மி தீக்ஷித், ஆஷி ரஸ்தோகி அடங்கிய அணி வெண்கலம் வென்றது.
உலகக் கோப்பையில் ஜிது ராய் உள்பட 3 பேர்
இத்தாலியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை ஃபைனல்ஸ் போட்டியில் இந்தியாவின் ஜிது ராய், சஞ்சீவ் ராஜ்புட், மைராஜ் அகமது கான் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதில், ஆடவர் 50 மீ. மற்றும் 10 மீ. பிஸ்டல் பிரிவில் ஜிது ராயும், ஆடவர் 50 மீ. 3 பொசிஷன்ஸ் பிரிவில் சஞ்சீவும், ஆடவர் ஸ்கீட் பிரிவில் மைராஜும் களம் காணுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.