

கரூர்: அத்தியாவசிய நிர்வாக அனுமதிகளை தாமதப்படுத்துவதன் மூலம் எய்ம்ஸ் மதுரை கட்டுமானப் பணிகளை திமுக அரசு முடக்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை், வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை (என்டிஏ) ஆதரிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
கரூரில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மதுரை எய்ம்ஸ் அமையும் இடத்தில் இருந்த மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்க கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆனது என்று குற்றம் சாட்டினார்.
"திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, எய்ம்ஸ் மதுரை கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதில் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு தாமதம் ஏற்பட்டது. ஆளும் திமுக அரசு திட்டங்களை திறமையாக செயல்படுத்துவதும் இல்லை, மற்றவர்களை அவ்வாறு செய்வதற்கு அனுமதிப்பதும் இல்லை" என்று அண்ணாமலை கூறினார்.
"வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை மாற்றத்திற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்து எடப்பாடி கே. பழனிசாமியை முதல்வராக்க வாக்களிக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.
234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிப்பு அடுத்து சில வாரங்களில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. 2021 தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 133 இடங்களைப் பெற்று, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றிக்கு இட்டுச் சென்றது, 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 இடங்களை வென்றது. அதே நேரத்தில் அதிமுக 66 இடங்களைப் பிடித்தது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது கூட்டணிக்கு பலம் சேர்ந்துள்ளதாக கருதப்படுகிறது.
இதற்கிடையே, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் தமிழ்நாட்டில் பாஜக, மற்ற கட்சிகளுடன் சேர்ந்து, ஆளும் திமுக-காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடிக்கும் முயற்சியில் களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. கூட்டம் கூடும் ரசிகர்களின் ஓட்டாக மாறுமா? என்பது சந்தேகமாக இருந்தாலும், விஜய்யின் பின்னால் இருக்கும் மக்கள் சக்தியால் இந்தத் தேர்தலில் மும்முனைப் போட்டி இருக்கும்.
சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) 2026 இன் கீழ் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.
சமீபத்தில் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மாநிலத்தில் ஒட்டுமொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆகும். இதில் 2,77,38,925 ஆண் வாக்காளர்கள், 2,89,60,838 பெண் வாக்காளர்கள் மற்றும் 7,617 மூன்றாம் பாலின வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.