45 நாளில் அறுவடை தரும் வெண்டை!

45 நாளில் மகசூல் தரும் வெண்டை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடலாம் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
45 நாளில் அறுவடை தரும் வெண்டை!

திருநெல்வேலி: 45 நாளில் மகசூல் தரும் வெண்டை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடலாம் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
ரகங்கள்: கோ 2. எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி மற்றும் வர்சா உப்கார் ரகங்களை தேர்வு செய்யலாம்.
வெண்டை கோ.பி.ஹெச் 1 இனக்கலப்பு: இது வர்சா உப்பார் தெரிவு, பி.ஏ. 4ன் இனக்கலப்பு ரகம். மஞ்சள் இலை மொசைக் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. சந்தைக்கு ஏற்றது. பழம் அடர் பச்சை, இளம், குறைவான நார், அங்கங்கு முடிகள் காணப்படும். ஹெக்டேருக்கு 22.1 டன் மகசூல் தரும்.
கோ 1 (1976): இது ஹைதராபாதிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுத்தமான ரகம். இளம் சிவப்பு நிறம் கொண்டது. மகசூல் 90வது நாளில் 12 டன் கிடைக்கும்.
கோ 3 (1991): இது பிரபானி கராந்தி மற்றும் எம்.டி.யூன் முதல் சந்ததி இனக்கலப்பு ரகம். மகசூல் 16 முதல் 18 டன் கிடைக்கும்.
கோ 2 (1987): இது ஏ.ஈ 180 மற்றும் பூசா சவானியன் முதல் சந்ததி இனக்கலப்பு ரகம். 90 நாளில் 15 முதல் 16 டன் மகசூல் தரும்.
மண், தட்பவெப்பநிலை: வெண்டை வெப்பம் விரும்பும் பயிர். நீண்ட நேர வெப்ப நாள் தேவை. பனி மூட்டத்தால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். குளிர் காலத்திலும், குளிர் பிரதேசங்களிலும் வெண்டை நல்ல முறையில் வளராது. வெண்டையை எல்லா வகை மண் வகையிலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்களில் மிகவும் நன்றாக வளரும். கார அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும்.
பருவம்: ஜூன் - ஆகஸ்ட், பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடலாம்.
விதை, விதைப்பு: ஹெக்டேருக்கு 7.5 கிலோ விதை போதும்.
நிலம் தயாரித்தல்: 3 அல்லது 4 முறை நிலத்தை உழவேண்டும். கடைசி உழவுக்கு முன்பு 25 டன் தொழு உரம் இட்டு 45 செமீ இடைவெளி விட்டு வரிப்பாத்தி (பார்சால்) அமைக்கவேண்டும்.
விதை நேர்த்தி, விதைத்தல்: விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு ஒரு கிலோவுக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திராம் கொண்டு நேர்த்தி செய்யவேண்டும். பின்பு விதைகளை 400 கிராம் அசோஸ்பைரில்லம் கலவையுடன் கலந்து விதைக்கவேண்டும். நிழலில் ஆறவைத்த அரிசிக் கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் தூளை நன்கு கலக்கவேண்டும். பிறகு இதில், வெண்டை விதையை நன்கு கலந்து அரை மணி நேரம் உலர வைக்கவேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை வரியில் 30 செ.மீ இடைவெளியில் 2 விதைகள் என்ற விகிதத்தில் 2 செ.மீ ஆழத்தில் ஊன்றவேண்டும். 10 நாட்களுக்கு பிறகு 2 செடிகளை விட்டு மீதம் உள்ளவற்றை களைதல் வேண்டும்.
நீர் நிர்வாகம்: நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும், பிறகு வாரத்திற்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.
உரமிடுதல்: அடியுரமாக 20 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து வரிகளில் ஒரு பக்கத்தில் இட்டு மண்ணுடன் நன்கு கலந்துவிடவேண்டும். நட்ட 30 நாள் கழித்து மேலுரமாக 20 கிலோ தழைச்சத்து இடவேண்டும். 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியம் நுண்ணுயிர்க் கலவையை 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு, தழைச்சத்தின் தேவையைக் குறைத்துக் கொள்ளலாம். மேலுரம் இட்டு மண் அணைத்து தண்ணீர் கட்டுவது மிகவும் அவசியம்.12 கிலோ இடவேண்டும்.
நூற்புழு தாக்குதலைத் தடுக்க: ஹெக்டேருக்கு 400 கிலோ வேப்பம் பிண்ணாக்கு விதைக்கும்போது, உரத்துடன் கலந்து இடவேண்டும் அல்லது ஒரு ஹெக்டேருக்கு கார்போபியூரான் 3ஜி குருணை மருந்து 1 கிலோ அல்லது போரேட் 10ஜி குருணை மருந்து கிலோ இடவேண்டும்.
அறுவடை: 45 நாளிலேயே அறுவடை செய்யலாம். காய்கள் முற்றும் முன்பாக அறுவடை செய்ய வேண்டும். 2 நாளுக்கு ஒருமுறை அறுவடை செய்வது அவசியம். ஹெக்டேருக்கு 90 முதல் 100 நாளில் 15 டன் வரை காய்கள் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com