மகசூல் அதிகரிக்க பயறுவகை உற்பத்தித் தொழில்நுட்பங்கள்

பயறு வகைப் பயிர்களின் சாகுபடி பரப்பு தற்போது குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப அதன் தேவையானது அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மகசூல் அதிகரிக்க பயறுவகை உற்பத்தித் தொழில்நுட்பங்கள்

தருமபுரி: பயறு வகைப் பயிர்களின் சாகுபடி பரப்பு தற்போது குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப அதன் தேவையானது அதிகரித்துக் கொண்டே வருகிறது.
எனவே, குறைவான சாகுபடிப் பரப்பில் பயறு வகைகளில் அதிக மகசூல் எடுக்க மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களைக் கையாள வேண்டும் என்பது குறித்து தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன் மற்றும் அட்மா தொழில்நுட்ப மேலாளர் ரவி ஆகியோர் கூறும் வழிமுறைகள்:
நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட, பருவத்திற்கேற்ற உயர் விளைச்சல் ரகங்களைச் சாகுபடி செய்தல்.
துவரை: கோ (ஆர்.ஜி) 7, வம்பன்1, வம்பன்2, வம்பன்3, கோ6, ஏ.பி.கே.1, பி.எஸ்.ஆர்.1, எல்.ஆர்.ஜி.41, ஜ.சி.பி.எல். ரகங்கள். 
உளுந்து: வம்பன்3, வம்பன்4, வம்பன்5,6, ஆடுதுறை3, ஆடுதுறை 5, டி.எம்.வி.1., ஏ.பி.கே.1. 
பாசிப்பயறு : கோ6, கோ8, வம்பன்2, வம்பன்3, வி.ஆர்.எம்.
(ஜிஜி)2,கோ7, ஆடுதுறை 3. 
தட்டைப்பயிறு: கோ 6, 
கோ(சிபி)7, வம்பன், வம்பன்2, கோ2, பையூர்1.
கொள்ளு: பையூர்1, பையூர்2. அவரை: கோ12, கோ13, கோ14.மொச்சை: கோ1, கோ2.
விதைநேர்த்தி செய்து விதைத்தல்: ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராமம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் ஆகியவற்றில் ஒன்றைக் கொண்டு விதை நேர்த்தி செய்யலாம்.
ரசாயன விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம், 50 டிபிள்யூ.பி. கொண்டு விதை நேர்த்தி செய்யலாம்.
நுண்ணுயிர் விதை நேர்த்தி: தலா ஒரு பொட்டலம் (200 கிராம்), ரைசோபியம் (பயறு) மற்றும் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் உரங்களை 200 மி.லி. ஆறிய அரிசிக்கஞ்சியில் கலந்து அவற்றில் ஓர் ஏக்கருக்குத் தேவையான பயறு விதைகளைக் கலந்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். ஓர் ஏக்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட விதையளவுடன் 50 மி.லி. மெத்தைலோ பாக்டீரியா திரவ நுண்ணுயிரியினைக் கலந்து 10 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்கவும்.
பயிர் எண்ணிக்கையைப் பராமரித்தல்: வரிசைக்கு வரிசை 30. செ.மீ. இடைவெளியும், செடிக்குச் செடி 10.செ.மீ இடைவெளியும் இருக்குமாறு விதைக்க வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் இருக்கலாம்.
ஒருங்கிணைந்த உர மேலாண்மை: அங்கக உரம் ஏக்கர் ஒன்றுக்கு 5 டன் மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட் கடைசி உழவின்போது இட்டு உழவு செய்ய வேண்டும்.
பயறு நுண்ணூட்டக் கலவை: ஏக்கருக்கு 2 கிலோ பயறு நுண்ணூட்டக் கலவையினைத் தேவையான அளவு மணலுடன் கலந்து விதைப்புக்கு முன் சீராகத் தூவ வேண்டும். நுண்ணூட்டக் கலவையினை அடியுரமாக இட்டு உழக் கூடாது.
நுண்ணுயிர் உரங்கள்: ஏக்கர் ஒன்றுக்கு தலா நான்கு பொட்டலங்கள் (800 கிராம்) ரைசோபியம் (பயறு) மற்றும் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் உரங்களை தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும் அல்லது ஏக்கர் ஒன்றுக்கு தலா 200 மி.லி. ரைசோபியம் (பயறு) மற்றும் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிரிகளை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, அதனை பத்து கிலோ நன்கு தூள் செய்யப்பட்ட தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து நடவு வயலில் தூவ வேண்டும்.
இலைவழி உரம் தெளித்தல்: ஏக்கர் ஒன்றுக்கு நான்கு கிலோ டி.ஏ.பி . உரத்தினை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் கரைசலை வடிகட்டி தெளிந்த கரைசலுடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து 200 லிட்டர் கரைசலாக்கி கைத்தெளிப்பான் மூலம் மாலை வேளையில் பூக்கும் தருணம் ஒருமுறையும் பின்பு 15 நாள்கள் கழித்து ஒரு முறையும் என இருமுறை தெளிக்க வேண்டும் அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் யூரியா உரத்தைக் கலந்து பூக்கும் தருணமும் 15 நாள்கள் கழித்து ஒரு முறையும் என இருமுறை தெளிக்க வேண்டும் அல்லது ஏக்கருக்கு 2.25 கிலோ பயறு அதிசயம் எனும் பயிர் வளர்ச்சியூக்கியைப் பூப்பூக்கும் தருணத்தில் 200 லிட்டர் தண்ணீர் கலந்து காலை அல்லது மாலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். பூக்கள் உதிர்வதைத் தடுக்க என்.ஏ.ஏ 40 பிபிஎம் (பிளானோபிக்ஸ்) 4.5 லிட்டர் தண்ணீருக்கு நான்கு மி.லிட்டர் அளவில் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும் 15 நாள்கள் கழித்து ஒருமுறையும் என இருமுறை தெளிக்க வேண்டும்.
தெளிப்பு நீர்ப் பாசனம் செய்தல்: தண்ணீரைச் சிக்கனப்படுத்திக் குறைந்த அளவில் தண்ணீரில் மிகுந்த அளவு பரப்பில் பயறு வகை பயிர்களைச் சாகுபடி செய்திட தெளிப்பு நீர்ப் பாசன கருவி நடமாடும் தெளிப்பு நீர்க் கருவி மழைத்தூவான் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளல்: நிலத்தினை நன்கு ஆழமாக உழவு செய்தல், கோடையுழவு செய்து காய்த் துளைப்பான்களின், கூண்டு புழுக்களைக் கட்டுப்படுத்துதல், பருவத்தில் விதைப்பு செய்தல், பூச்சி நோய் எதிர்ப்புள்ள ரகங்களைப் பயிரிடலாம்.
துவரை: வம்பன்2 - மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. ஏபி.கே1-காய்த் துளைப்பானுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது.
உளுந்து: வம்பன்4, 5,6,7,8 மற்றும் கோ 6, மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டவை. 
பாசிப்பயறு: வம்பன் 2, வம்பன்3, மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டவை.
நேரடி இயந்திர முறைகள்: இரவில் விளக்குப்பொறி வைத்துப் பூச்சிகளைக் கண்காணித்தல். 
இனக் கவர்ச்சிபொறி- ஏக்கர் ஒன்றுக்கு ஐந்து எண்கள் வைத்து பச்சைக்காய்ப் புழு (ஹெலிக்கோவெர்பா), புள்ளிக்காய்ப் புழு (மெளருக்கா). முள்காய்ப்புழு (ஈட்டியெல்லா) ஆகியவற்றின் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். நன்கு வளர்ந்த புழுக்களையும் முட்டைக் குவியல்களையும் கையுறை அணிந்து கைகளில் சேகரித்து அழிக்கலாம். களைகள் இல்லாமல் வயலைச் சுத்தமாக வைத்திருத்தல். 
உயிரியல் கட்டுப்பாட்டு முறை: ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனஸ் புளோரசன்ஸ் உயிரியல் மருந்து கொண்ட விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சிக்களான அசுவினி இலைப்பேன், தண்டு ஈ, வெள்ளை ஈ, தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த வெர்ட்டிசீலியம் லெக்கானி எனும் உயிரியல் பூஞ்சாளக்கொல்லி மருந்தினை ஏக்கருக்கு 1 முதல் 2 கிலோ அளவு வரை கலந்து 15 நாள்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும். பெவேரியா பேசியானா - ஏக்கருக்கு 1 முதல் 2 கிலோ அளவு வரை ஒட்டும் திரவத்துடன் சேர்த்து 200 லிட்டர் தண்ணீர் கலந்து 15 நாள்கள் இடைவெளியில் இருமுறை தெளித்து காய்த் துளைப்பான்களைக் கட்டுப்படுத்தலாம்.
ரசாயனக் கட்டுப்பாட்டு முறைகள்: பொருளாதாரச் சேத நிலையினை (10 சதம் பாதிக்கப்பட்ட காய்கள் அல்லது இலைகள்) தாண்டும்போது ஏக்கர் ஒன்றுக்கு இமாமெக்டின் பென்சோனேட் 5 எஸ்.ஜி-100 கிராம் அல்லது இன்டாக்சாகார்ப் 15.8 இ.சி.- 130 மி.லி. அல்லது நோவலூரான் 10 இ.சி., 300 மி.லி. அல்லது ஸ்பினோசட் 45 எஸ்.சி.-50 மிலி தெளித்துக் கட்டுப்படுத்தலாம். 
வெள்ளை ஈ ஏக்கர் ஒன்றுக்கு அசிட்டாமிபிரிடு 20 எஸ்.பி-80 முதல் 100 கிராம் வரை அல்லது டைமெத்தோயேட் 30 இ.சி. 200 மி.லி. தெளித்துக் கட்டுப் படுத்தலாம். 
அசுவினி: ஏக்கர் ஒன்றுக்கு டைமேத்தோயேட் 30 இ.சி, 200 மிலி தெளித்து கட்டுப்படுத்தலாம்.
மஞ்சள் தேமல் நோய்: இந்நோயினைப் பரப்பும் வெள்ளை ஈயை ஏக்கர் ஒன்றுக்கு 80 முதல் 100 கிராம் வரை அசிட்டாமிபிரிடு 20 எஸ்.பி. அல்லது டைமெத்தோயேட் 30 இ.சி-200 மிலி தெளித்துக் கட்டுப்படுத்தலாம். எனவே, விவசாயிகள் இத்தகைய தொழில்நுட்பங்களைப் பின்பற்றி அதிக மகசூல் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com