நன்செய் நிலங்களில் சேற்று நெல் சாகுபடி!

நன்செய் நிலங்களில் நெல் பயிரிடுவதில் ஆர்வமுள்ள விவசாயிகள் சேற்று நெல் சாகுபடி முறையைப் பின்பற்றி நல்ல மகசூல் ஈட்டலாம் என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.
நன்செய் நிலங்களில் சேற்று நெல் சாகுபடி!

திருநெல்வேலி: நன்செய் நிலங்களில் நெல் பயிரிடுவதில் ஆர்வமுள்ள விவசாயிகள் சேற்று நெல் சாகுபடி முறையைப் பின்பற்றி நல்ல மகசூல் ஈட்டலாம் என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.
விதையளவு: ஒரு ஹெக்டேர் நடவுக்கு நீண்ட கால ரகம் எனில் 30 கிலோ, மத்திய காலமாயின் 40 கிலோ, குறுகிய கால ரகம் என்றால் 60 கிலோ போதும்.
விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கார்பன்டஜிம் அல்லது பைரோகுயிலான் 2 கிராம் அல்லது டிரைசைக்லோஜோல் கரைசல் 2 மி.லி. கலந்து 10 மணி நேரம் ஊற வைத்து பின்னர் வடிகட்ட வேண்டும். இதன் மூலம், இளம் வயதில் பாதிக்கக்கூடிய தோகை எரிப்பு நோயிலிருந்து 40 நாள் வரை பாதுகாப்பு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஊற வைத்த விதையை உடன் விதைக்க வேண்டுமெனில் நனைந்த கோணிச் சாக்கில் கட்டி மூடி, 24 மணி நேரம் இருட்டில் வைத்து முளை எட்டிய பின்னர் விதைக்கலாம். அல்லது நிழலில் உலர்த்தி தக்க ஈரப்பதத்தில் சேமித்து பின்னர் விதைக்க வேண்டும்.
சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் கரைசல் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து 10 மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி முன்பு சொன்ன முறையில் விதைக்கலாம்.
நாற்றங்கால் தயாரிப்பு: தயாரிக்கப்பட்ட நிலம் 2.5 மீ (8 அடி) அகலமுள்ள பாத்திகளாக, 30 செ.மீ (ஓரடி) இடைவெளியுள்ள வாய்க்கால் பாத்தியைச் சுற்றிலும் அமைக்க வேண்டும். பாத்தியின் நீளம் 8 முதல் 10 மீ வரையில் நிலத்தின் சமன் அமைப்பு மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப அமைக்கலாம். வாய்க்கால் அமைக்கும்போது எடுக்கப்பட்ட மண்ணை பாத்தியில் பரப்பி நிரவலாம்.
விதைப்பு: முளைகட்டிய விதையைப் பாத்தியில் பரவலாக தூவ வேண்டும். தண்ணீர் அளவு 1-2 செ.மீ. அளவு இருத்தல் நல்லது.
நீர் நிர்வாகம்: விதைத்த 24 மணி நேரத்துக்குள் தண்ணீர் வடிக்கப்பட்டு விதை முளைக்க சந்தர்ப்பம் தரப்படவேண்டும்.
குண்டுகுழிகளில்கூட தண்ணீர் தேங்கி நிற்காதவாறு பாத்தி அமைப்பும், நீர் நிர்வாகமும் அமைக்கப்பட வேண்டும்.
விதைத்த மூன்று முதல் ஐந்து நாள் வரை நீர் கட்டுவது, தண்ணீர் தேங்கி நிற்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நீரின் உயரம் 5 நாளிலிருந்து சிறிது சிறிதாக நாற்றின் வளர்ச்சிக்கேற்ப உயர்த்தலாம். அதிக பட்சமாக (ஓர் அங்குல ஆழம்) நீர் கட்டுவது சிறந்தது.
களை நிர்வாகம்: விதைத்த 3 அல்லது 4ஆம் நாளில் களை முளைப்புக்கு முந்தைய களைக்கொல்லி பிரிடில்லாகளோர், சேஃப்பனர் 0.3 கிலோ என்ற அளவில் ஒரு ஹெக்டேர் நாற்றுகளுக்குத் தெளிக்க வேண்டும். களைக்கொல்லி தெளிக்கும் முன்னர் சிறிய அளவு தண்ணீர் நிறுத்த வேண்டும். தேக்கப்பட்ட நீரை வடிக்கக் கூடாது.
தானாகவே மண்ணில் மறைதல் சிறந்தது. விதைத்த 8 நாளுக்குப் பிறகு ஈரப்பதம் இருக்கும் நிலையில் களைக்கொல்லி தெளிக்க வேண்டும்.
உர நிர்வாகம்: 20 சென்டுக்கு 1 டன் தொழு உரம், மாட்டு எரு தேவைப்படும். கடைசி உழவின்போது 20 சென்ட் நாற்றங்காலுக்கு 40 கிலோ டிஏபி உரமோ அல்லது 16 கிலோ யூரியாவும் 120 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும் கலந்தோ இட வேண்டும். அடியுரமாக டிஏபி இடுவது குறைவான மண் சத்துள்ள நாற்றங்கால்களுக்கு உகந்தது.
நாற்றுகளை 25 நாளுக்குப் பின்னர் எடுத்து நடவேண்டிய தருணங்களில், ரசாயன உரமிட்டு, அதிகபட்சம் 10 நாளுக்குள் நாற்றுகள் எடுத்து நடவேண்டும். மிக அதிகமான களிமண் நிலத்தில் நாற்று எடுக்கும்போது வேர் அழுகும் நிலை ஏற்படின், விதைத்த 10 ஆம் நாள் ஒரு சென்டுக்கு 4 கிலோ ஜிப்சம், 1 கிலோ டிஏபி கலந்து இட வேண்டும்.
புழுதி நாற்றங்கால்: ஆற்றில் தண்ணீர் வருவது பின்தங்கும் தருணத்தில் புழுதி நாற்றங்கால் வரப்பிரசாதமாக அமையலாம். நாற்றங்காலின் பரப்பு, விதை அளவு, விதை நேர்த்தி ஆகியவை சேற்று நாற்றங்காலுக்குக் குறிப்பிட்டதைப்போல பின்பற்ற வேண்டும். நாற்றங்கால் நன்கு உழப்பட்டு 1 முதல் 1.5 மீ அகலமுள்ள பாத்திகளாக அமைக்க வேண்டும். பாத்தியைச் சுற்றிலும் ஓரடி அகல வாய்க்கால் அமைப்பது நல்லது. களிப்பு அதிகமுள்ள மண் வகைகளில் மேட்டுப் பாத்தி அமைக்கலாம். மணற்பாங்கான பகுதிகளில் படுக்கைப் பாத்தி போதுமானது. நேர்த்தி செய்யப்பட்ட உலர்ந்த விதைகள் தூவப்பட்டு நன்கு மக்கிய மாட்டு அல்லது தொழு உரத்தால் விதைகள் மூடப்பட வேண்டும். மண் நனையும் அளவு நீர் பாய்ச்சுவதோ, தெளிப்பதோ வேண்டும். நான்கு இலைப் பருவம் நடவுக்கு ஏற்றது.
ரசாயன உரமிடுதல்: மண் பரிசோதனை மூலம் தேவையான உரங்களைக் கணக்கிட வேண்டும். இறவை நெற்பயிருக்கு குறிப்பிட்ட வயலுக்கேற்ற உரமிடும் முறை மூலம் மணி, சாம்பல் சத்து இடுவதை நிர்ணயிக்கவேண்டும். மண் பரிசோதனை மூலம் உரமளிக்க நேரமில்லையெனில் பொதுவான பரிந்துரையைப் பின்பற்றலாம்.
நீர் மேலாண்மை: சேற்று உழவும், உழுது நிலத்தை சமன் செய்தலும், நீரின் தேவையைக் குறைக்கின்றன. இரும்புச் சக்கரக் கலப்பையால் சேற்றுழவு செய்யும்போது நீர் மண்ணினுள் ஊடுருவி வீணாவது 20% வரை தடுக்கப்படுகிறது. வயலில் மடக்கி உழப்பட்ட பசுந்தாள் உரம் நல்ல முறையில் மக்குவதற்கு குறைந்தது ஓர் அங்குல நீர் நிறுத்த வேண்டும். குறைந்த நார்த்தன்மையுடைய சணப்பை, தக்கைப்பூண்டு போன்றவற்றுக்கு 7 நாளும், அதிக நார்த்தன்மையுடைய கொளுஞ்சி இனங்களுக்கு 15 நாளும் நீர் நிறுத்திய பின்னரே நடவு செய்யவேண்டும்.
நடும்போது தண்ணீரின் அளவு, சேறும் சகதியுமாய் இருத்தல் நல்லது. இவ்வாறு அமைந்தால் சரியான ஆழத்தில் நடவும், அதிக தூர் பிடிப்பதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கும். நட்ட ஒரு வாரத்துக்கு ஓர் அங்குல நீர் தேக்கி வைக்கவேண்டும். இது தூர் பச்சை பிடிக்கும் காலமானதால் நீர் அளவு குறையாமல் பராமரிக்கவேண்டும். பச்சை பிடித்த பின்பு 2 அங்குல ஆழத்துக்கு நீர்கட்டி, கட்டிய நீர் மறைந்து நூலளவு மண்வெடிப்பு தோன்றும்போது மீண்டும் நீர்கட்டுதல் வேண்டும். இம்முறையில் நீர்கட்டுதல் பயிர் முதிர்ச்சியடையும் வரை கடைப்பிடிக்கவேண்டும்.
அறுவடை: நட்ட ரகத்தின் வயதுக்கேற்ப அறுவடைக் காலத்துக்கு 7 நாள் முன்பாக நீர் தேங்கி நிற்காமல் பார்த்துக்கொள்வது அறுவடைக்கு நல்லது. 80 சதம் கதிர்மணி முற்றிய பின்பும்கூட வயலில் பச்சை இலைகளின் தோற்றம் காணப்படும். 
எனவே, கதிர் முதிர்ச்சியடைந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். பொதுவாக கதிரின் அடிப்பாகத்தில் உள்ள நெல்மணிகளை விரல்களால் அழுத்திப்பார்த்து முதிர்ச்சியை முடிவு செய்யலாம். மணிகள் அழுத்தப்படும்போது கடினமாகவும் பால் வெளியில் வராத நிலையிலும் இருப்பின் அறுவடைக்குத் தயார் எனக் கருதலாம். 
அறுவடை செய்த நெல்மணிகளை பதர் நீக்கி, இளம் வெயிலில் நீர்ப்பதம் குறைத்து சேமிக்க வேண்டும். ஈரம் உலர்த்தப்படும் விதம் நெல்லின் அரைவை திறனையும், அரிசியின் தன்மையையும் பாதிக்கும். அறுவடையை 3 நாள் முன்கூட்டி செய்ய வேண்டியிருந்தால் சாப்பாட்டு உப்புக் கரைசல் 20 சதம் என்ற அளவில் இலைகளில் தெளித்து 48 மணி நேரத்துக்குப் பின் அறுவடை செய்யலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com