சின்ன வெங்காயத்தில் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த...

சின்ன வெங்காயத்தில் ஏற்படும் இலைப்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
சின்ன வெங்காயத்தில் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த...

அரியலூர்: சின்ன வெங்காயத்தில் ஏற்படும் இலைப்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத் தொழில்நுட்ப வல்லுநர் ராஜாஜோஸ்லின் கூறியதாவது:
அரியலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடியை 125 ஏக்கரில் விவசாயிகள் செய்துள்ளனர். இப்பயிருக்கு நல்ல வடிகால் வசதியுடன் கூடிய வண்டல் மண் மிகவும் உகந்தது. களிமண் நிலத்தில் வெங்காயச் சாகுபடி மிகவும் கடினம். இதன் பருவமானது ஏப்ரல், மே மற்றும் அக்டோபர், நவம்பர், நிலத்தை 2 அல்லது 3 முறை நன்கு உழ வேண்டும்.
கடைசி உழவின்போது 45 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். ஏக்கருக்கு அடியுரமாக 12 கிலோ தழைச்சத்து, 24 கிலோ மணிச்சத்து மற்றும் 12 கிலோ சாம்பல் சத்து மற்றும் யூரியா 26 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 150 கிலோ, பொட்டாஷ் 20 கிலோ என்ற அளவில் ரசாயன உரங்களை அளிக்க வேண்டும்.
மேலும் நடுத்தர அளவுள்ள நன்கு காய்ந்த வெங்காயத்தை பார்களின் இருபுறமும் சரிவில் 10 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். 
விதைத்த 3 ஆம் நாளும், பின்பு வாரம் ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும். தேவைப்படும்போது களையெடுக்க வேண்டும். வெங்காயம் நட்ட 30 நாட்கள் கழித்து மேலுரமாக ஏக்கருக்கு 12 கிலோ தழைச்சத்து கொடுக்கக் கூடிய யூரியா உரத்தை போட வேண்டும்.
சின்ன வெங்காயத்தில் பல்வேறு நோய்கள் தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன. அதில் இலைப்பேன் தாக்குதல் பெரும் இழப்பை விவசாயிகளுக்கு ஏற்படுத்துகிறது. இந்நோய் தாக்குதலின்போது பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இலைகளைச் சுரண்டி உறிஞ்சுவதால் இலைகள் வெண் திட்டுக்களாக இருக்கும். 
இலைகள் நுனியில் இருந்து வாடும். இதைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு மீதைல் டெமட்டான் 200மி. அல்லது பாஸ்போமிடான் 200 மி என்ற அளவில் தெளிக்க வேண்டும். அதிகம் தழைச்சத்து இடுவதையும், நெருக்கி நடுவதையும் விவசாயிகள் தவிர்க்க வேண்டும்.
மேலும் வெங்காய ஈ தாக்குதலின்போது மண்ணில் உள்ள இடுக்குளில் முட்டையிடும். அவற்றிலிருந்து வரும் சிறிய வெண்ணிறப் புழுக்கள் நிலத்தடியில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெங்காயத்தை குடைந்து தின்று அழுகச் செய்யும். இதைக் கட்டுப்படுத்த புரபனோபாஸ் 50 இசி, ஒரு மிலி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன் மாலிக்ட்ரகசைடு என்ற பயிர் முளைப்பைக் கட்டுப்படுத்தும் பயிர் விளையல் ரசாயனப் பொருளை 2.5 மி.லி லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் இலைவழி ஊட்டமாகத் தெளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் வெங்காயத்தின் சேமிப்புக் காலத்தை அதிகப்படுத்தலாம். மேலும் வெங்காயத்தைப் பிடுங்கிய பின்னர் மேல்தாள்களை நீக்கி காய வைக்க வேண்டும். பின் நல்ல காற்றோட்டமுள்ள அறைகளில் சேமித்து வைக்க வேண்டும். இதனால் சின்னவெங்காயத்தில் அதிக மகசூல் பெற முடியும். மேலும் இதுதொடர்பாக தகவல் பெற சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com