மிளகாய் சாகுபடியில் அதிக மகசூல் பெற...

தோட்டக்கலைப் பயிர்களில் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு தொடர்ந்து
மிளகாய் சாகுபடியில் அதிக மகசூல் பெற...

திருச்சி: தோட்டக்கலைப் பயிர்களில் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யும் பயிராக மிளகாய் உள்ளது. மிளகாய் சாகுபடியில் தகுந்த ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலம் நல்ல மகசூல் பெறலாம்.
ரகங்கள் 
மானாவாரி மற்றும் இறவையில் பயிரிட கோ 1, கோ 2, கோ 1, கோ 2, கோ 3, பிகேஎம் 1, பிகேஎம் 1 ஆகியவை சிறந்தவை. கடற்கரையோர மாவட்டங்களுக்கு பயிரிட பிஎல்ஆர் 1 ரகம் சிறப்பானது.
மேலும், இந்திய தோட்டக்கலைப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள அர்கா மெகானா, அர்கா ஹரிதா, அர்கா சுவேதா மற்றும் அர்கா லோகித் ரகங்களும் உள்ளன. இவைத் தவிர சாத்தூர் சம்பா, இராமநாதபுரம் குண்டு, நம்பியூர் குண்டு ஆகிய நாட்டு வகைகளும் அந்தந்தப் பகுதிகளில் பயிர் செய்யப்படுகின்றன.
மண் மற்றும் தட்பவெப்பநிலை 
நல்ல வடிகால் வசதியுடைய நிலங்கள் மிளகாய் பயிரிட ஏற்றவை. கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டர் உயரம் வரை உள்ள வெப்பப் பிரதேசங்களில் மிளகாய் நன்கு வளரும். உறைபனி இல்லாத 250 சென்டி கிரேட் வரை இருக்கக்கூடிய வெப்பம் உகந்தது. மானாவாரியிலும், இறவையிலும் இதைப் பயிரிடலாம். இந்தப் பயிரில் 2 மணி நேரத்துக்கு மேல் நீர் நின்றால் செடியின் வேர்கள் அழுகிவிடும்.
விதைத்தல் மற்றும் நடவு பருவம்: ஜனவரி - பிப்ரவரி, ஜீன் - ஜீலை, செப்டம்பர் மாதங்கள் மிளகாய் சாகுபடிக்கு ஏற்றவை.
விதை அளவு 
ஒரு ஹெக்டேருக்கு ஒரு கிலோ (நாற்றாங்காலுக்கு) தேவைப்படும். நேரடி விதைபுக்கு 2 கிலோ போதுமானது.
விதை நேர்த்தி 
விதை மூலம் பரவும் நுனிக்கருகல் நோய், பழம் அழுகல் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு காப்டான் அல்லது திராம் 2 அல்லது ட்ரைகோடெர்மா விரிடி 4 கிராம் வீதம் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து விதைக்கவேண்டும். அசோஸ்பைரில்லம் நுண்ணுயிரியை ஹெக்டருக்கு 2 பொட்டலம் வீதம் விதை நேர்த்தி செய்வதால் தழைச்சத்தின் தேவையை 25 விழுக்காடு குறைக்கலாம்.
நாற்றங்கால் 
நாற்றாங்காலுக்கு மேட்டுப் பாத்திகள் 1 மீட்டர் அகலமும், 3 மீ நீளமும், 15 செ.மீ உயரமும் கொண்டதாக இருக்கவேண்டும். ஒரு சென்ட் நாற்றாங்காலுக்கு மக்கிய தொழு உரம் 75 கிலோ இடவேண்டும். பாத்திகளில் விதைகளை 2 செ.மீ ஆழத்தில் 5-10 செ.மீ இடைவெளியில் வரிசையில் விதைக்கவேண்டும். விதைத்த பிறகு வைக்கோல் அல்லது உலர்ந்த இலைகளைப் பாத்திகளின் மேல் பரப்பவேண்டும். பூவாளி கொண்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். விதைத்த 10-15 நாள்களில் பாத்திகளில் பரப்பியதை அகற்றிவிடவேண்டும்.
நாற்றாங்காலில் வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த 15 நாள்கள் இடைவெளியில் புளுகாப்பர் 2.5 கிராம் மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து ஊற்றவேண்டும். நடவுக்காக நாற்று பிடுங்குவதற்கு 15 நாள்களுக்கு முன் ஒரு சென்ட் நாற்றாங்காலுக்கு 250 கிராம் பியூராடன் குருணைகளை இடுவது நூற்புழு மற்றும் இளம் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும். நடுவதற்கு 40 முதல் 44 நாள்கள் வயதுடைய நாற்றுக்களே ஏற்றவை. நேரடியாக விதைக்கப்பட்ட பாத்திகளில் விதைத்த 30 நாள்களுக்குப் பிறகு தேவையான பயிர் எண்ணிக்கை இருக்குமாறு கலைத்து இடைநிறைவு செய்வது அவசியம்.
நிலம் தயாரித்தல் 
நிலத்தை 4 முறை உழுது, கடைசி உழவின் போது ஹெக்டேருக்கு 25 டன் தொழு எரு அல்லது மக்கும்குப்பை இட்டு 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைத்து, பயிருக்கு பயிர் 30 செ.மீ இடைவெளியில் நடவேண்டும். கோ 3 வகைகளுக்கு 30-க்கு 15 செ.மீ இடைவெளியில் நடவு செய்யவேண்டும்.
உரமிடுதல் 
அடியுரமாக ஹெக்டேருக்கு 30 கிலோ தழைச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும். மானாவாரி அல்லது இறவைப்பயிருக்கு தழைச்சத்தை மூன்று முறை பிரித்து இடவேண்டும். இறவையில் விதைத்த 70,100 மற்றும் 130ஆவது நாள், நடவுப் பயிரில் நட்ட 30,60,90ஆம் நாள் ஒவ்வொரு முறையும் எக்டருக்கு 30 கிலோ வீதம் இடவேண்டும். உரமிட்ட பிறகு நீர்ப் பாய்ச்சவேண்டும்.
நீர் நிர்வாகம் 
கோடை காலங்களில் 7 நாள்களுக்கு ஒரு முறையும், மழைக் காலங்களில் 15 நாள்களுக்கு ஒரு முறையும் நீர்ப் பாய்ச்சவேண்டும்.
களைக் கட்டுப்பாடு 
இறவைப் பயிர் நாற்றுக்கள் நட்ட 3ஆவது நாள் ஹெக்டேருக்கு புளுகுளோரலின் ஒரு கிலோ மருந்து என்ற அளவில் 500 லிட்டர் நீரில் கலந்து சீராக கைத் தெளிப்பான் கொண்டு தெளிக்கவேண்டும். நட்ட 45ஆவது நாள் மண் அனைத்து ஒரு கைக்கிளை எடுக்கவேண்டும்.
ஊடுபயிர் 
மிளகாயில் 45 செ.மீ என்ற அளவில் வரிசைக்கு வரிசை இடைவெளி விட்டு ஊடுபயிராக கொத்தமல்லி அல்லது சின்ன வெங்காயத்தை இரு வரிசைக்கு மத்தியில் வளர்த்து களைகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் உபரி வருமானம் பெறலாம்.
பயிர் ஊக்கிகள் தெளித்தல் 
பூக்கள், பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கவும், பூக்கள் விடுவதைத் தூண்டவும் நட்ட 60 அல்லது விதைத்த 100ஆவது நாளில் ஒரு முறையும், 30 நாள்களுக்குப் பிறகு இரண்டாவது முறையும் வளர்ச்சி ஊக்கி (என்ஏஏ) 10 மில்லி கிராம் ஒரு லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும். மேலும் டிரையகான்கைடனால் 1.25 மி.லி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
அறுவடை 
பச்சை மிளகாயை நட்ட 75 நாள்களிலும் அல்லது விதைத்த 105 நாள்களிலும், பழுத்த பழங்களை ஒரு மாதத்துக்குப் பின்னும் அறுவடை செய்யலாம். 3 முதல் 4 மாதங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யலாம். முதல் இரண்டு பறிப்புகளிலிருந்து பச்சை மிளகாயும், அடுத்த பறிப்புகளிலிருந்து பழுத்த மிளகாயும் அறுவடை செய்யலாம்.
மகசூல்
ஒரு ஹெக்டேருக்கு 210 -240 நாள்களில் 2-3 டன் வற்றலும், 10-15 டன் பச்சை மிளகாயும் கிடைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com