மானாவாரி சோளம் சாகுபடி!

மானாவாரி பயிராக சோளம் சாகுபடி செய்வதில் தகுந்த தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றினால் கூடுதல் மகசூலும், அதிக லாபமும் ஈட்ட முடியும் என வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மானாவாரி சோளம் சாகுபடி!

மானாவாரி பயிராக சோளம் சாகுபடி செய்வதில் தகுந்த தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றினால் கூடுதல் மகசூலும், அதிக லாபமும் ஈட்ட முடியும் என வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
பருவம்: வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழையை ஒட்டி விதைப்பு செய்யலாம். சராசரி மழையளவு 250-300 மி.மீட்டர் உள்ள இடங்கள் மிகவும் ஏற்றவை.
நிலம் தயாரித்தல்: கோடை மழையைப் பயன்படுத்தி, பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தை சட்டிக் கலப்பைக் கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும். பின்னர் ஒவ்வொரு மழைக்குப் பிறகும் கலப்பைக் கொண்டு நிலத்தை உழுதுவிடவேண்டும். கோடை உழவினால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு, மழைநீர் சேமிக்கப்படுவதுடன், கோடை மழையில் முளைக்கும் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. நிலத்தடியில் இருக்கும் கூட்டுப்புழுக்கள் உழவின்போது மேலே கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுவதால் பயிர்க்காலத்தில் பூச்சித் தாக்குதல் குறையும். மழைக் காலத்தில் மழைநீரைச் சேமித்து மண் ஈரம் காக்க ஆழச்சால அகலப்படுத்தி சம உயர வரப்பு, சமதள சாகுபடி, நிலப்போர்வை அமைத்தல், களைக் கட்டுப்பாடு போன்ற முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
விதையும் விதைப்பும்: ஹெக்டேருக்கு 15 கிலோ விதை போதுமானது. 45-க்கு 15 செ.மீ அல்லது 45- க்கு 10 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும்.
விதைநேர்த்தி: வறட்சியைத் தாங்கி வளர, விதைகளைக் கடினப்படுத்தி பின்பு விதைக்க வேண்டும். பொட்டாசியம் டை-ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராமுடன் ஒரு லிட்டர் நீர் கலந்த கரைசலில் விதைகளை 6 மணி நேரம் ஊறவைத்து நிழலில் தன் எடைக்கு உலர்த்திய பின் விதைப்பதால் பயிர் வறட்சியைத் தாங்கி வளரும்.
நுண்ணுயிர் உரங்கள் விதைநேர்த்தி: ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதைகளை 3 பொட்டலம் (600 கிராம்) அசோஸ்பைரில்லம் மேலும் 3 பொட்டலம் (600 கிராம்) பாஸ்போ பாக்டீரியா அல்லது 6 பொட்டலம் (1200 கிராம்) அசோபாஸ் கொண்டு விதைநேர்த்தி செய்யவேண்டும். இதன் மூலம் மண்ணிலுள்ள தழைச்சத்து கிரகித்து பயிர்களுக்கு அளிக்கப்படும்.
நிலத்தில் இடுவதாக இருந்தால் ஒரு ஹெக்டேருக்கு 10 பொட்டலம் (2000 கிராம்) அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பொட்டலம் (2000 கிராம்) பாஸ்போ பாக்டீரியாவுடன் அல்லது 20 பொட்டலம் (4000 கிராம்/ ஹெக்டேர்) அúஸாபாஸை 25 கிலோ மணல் மற்றும் 25 கிலோ தொழு உரம் கலந்து தூவவேண்டும்.
விதைப்பு: விதைக்கும்போது விதைகளை 15 கிராம் குளோர்பைரிபாஸ் உடன் 150 மில்லி ஒட்டும் பசை சேர்த்து நிழலில் உலரவைத்து பின்பு 5 செ.மீ ஆழத்தில் பருவ மழைக்கு முன்பு விதைக்கவேண்டும்.
முன்பருவ விதைப்பு: மழை தொடங்குவதற்கு 15 நாள்களுக்கு முன்பு விதைப்பதே முன்பருவ விதைப்பு முறையாகும். விதைகளைக் கடினப்படுத்தி 5 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் மழை ஆரம்பத்தைக் கணக்கிட்டு விதைக்கும் தருணம் வேறுபடும். கோயமுத்தூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பெரும்பாலும் செப்டம்பர் 2ம் வாரம் முதல் 3ம் வாரத்தில் தொடங்கும். எனவே, கோவையில் செப்டம்பரில் 2 அல்லது 3ஆம் வாரத்தில் முன்பருவ விதைப்பு செய்யலாம்.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அக்டோபர் முதல் வாரம், தூத்துக்குடியில் செப்டம்பர் கடைசி வாரம் முதல் அக்டோபர் முதல் வாரம் விதைப்பு செய்யலாம். வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் செப்டம்பர் இரண்டாம் வாரம் முதல் செப்டம்பர் மூன்றாம் வாரம் வரை விதைப்பு செய்யலாம்.
சோளப் பயிருடன் இணை வரிசையில் பயறு வகைகளைப் பயிர் செய்தால் உபரி வருமானம் கிடைப்பதோடு மண்வளத்தையும் அதிகரிக்க முடியும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை: ஒரு ஹெக்டருக்கு 12.5 டன்கள் மக்கிய தென்னை நார்க்கழிவு இடவேண்டும். ரசாயன உரங்களை மண்பரிசோதனையின் பரிந்துரைப்படி இடவேண்டும். அல்லது பொதுப் பரிந்துரைப்படி ஹெக்டருக்கு 40: 20 : 0 என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடவேண்டும்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி: சோளப்பயிர் முளைவிட்ட இரண்டாம் வாரம் முதல் 5ஆம் வாரம் வரை களைகள் இல்லாமல் இருப்பது பயிருக்கு நல்லது. மண்ணில் போதுமான ஈரம் இருக்கும்போது ஹெக்டேருக்கு 500 கிராம் அட்ரசின் என்ற களைக்கொல்லி மருந்தை விதைத்த 3-5 நாள்களுக்குள் 900 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டோ அல்லது மணலில் கலந்தோ இடலாம். பயறுவகைப் பயிர்களுடன் ஊடுபயிராக பயிரிட்டிருந்தால் ஹெக்டேருக்கு 2 லிட்டர் பெண்டிமிதிலின் தெளிக்கவேண்டும்.
மறுதாம்பு சோளம்: மறுதாம்புப் பயிர் சாகுபடிக்கு நடவுப் பயிரை அறுவடை செய்யும்போது நில மட்டத்தில் இருந்து 15 செ.மீ தட்டையை விட்டு அறுத்து உடனடியாக நீர் பாய்ச்சவேண்டும். அறுவடை செய்தவுடன் களை எடுக்கவேண்டும். பின்னர், 15 மற்றும் 30ஆம் நாள் ஒரு களை எடுக்கவேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 100 கிலோ தழைச்சத்தை இரண்டாகப் பிரித்து 50 கிலோ மணிச்சத்துடன் மறுதாம்புப் பயிராக விட்ட 15ஆவது நாளில் இடவேண்டும். மீதம் உள்ள தழைச்சத்தை 45ஆவது நாளில் இடவேண்டும்.
மண் மற்றும் கால நிலையைப் பொருத்து நீர் பாய்ச்சவேண்டும். மறுதாம்புப் பயிராக விட்ட 70-80ஆவது நாளில் நீர்ப்பாசனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். பூச்சி நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மறுதாம்புப் பயிரின் வயது நடவுப் பயிரை விட 15 நாள்கள் குறைவாக இருக்கும்.
அறுவடை பின்சார் தொழில்நுட்பம்: இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது சோளம். முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேகவைத்து அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. முழுச்சோளம் அரைத்து மாவிலிருந்து சப்பாத்தி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. சோளமானது நொதித்தல் தொழிற்சாலை மற்றும் எரிசாராயம் மற்றும் கரைப்பான் தொழிற்சாலைகளில் மாவுச்சத்து பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com