வேட்புமனு தாக்கல்: அலுவலகப் பகுதிகளில் 144 தடை உத்தரவு
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 17 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறுவதையடுத்து, வேட்புமனு தாக்கல் செய்யப்படும் அலுவலகங்களைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சுனில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
இதனையொட்டி, பெங்களூரில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் தேர்தல் அலுவலகங்களின் 100 மீட்டர் சுற்றளவில் ஏப்ரல் 17-ஆம் தேதி காலை 6 மணி முதல் 24-ஆம் தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவின்போது, அந்தப் பகுதியில் 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக்கூட்டம், போராட்டம், ஊர்வலம், தர்னா நடத்துவதோ கூடாது.
இதுதவிர, ஆயுதங்கள், வெடிபொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுனில்குமார் தெரிவித்துள்ளார்.