பெங்களூரு தமிழ்ச் சங்க பிரச்னையை தீர்க்க டிச.9-ஆம் தேதி கலந்துரையாடல் கூட்டம் நடத்த பெங்களூரு தமிழ்ச் சங்கம் நலம் காப்போர் குழு ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கம் நலம் காப்போர் குழு வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் தற்போதைய நிலைமையும் நிகழ்வுகளும் கவலை அளிப்பதாக உள்ளது. பொதுக்குழுவை கூட்டுவது, தேர்தல் நடத்துவது தற்போது நடைபெறவில்லை. இந்த அவல நிலையில் இருந்தும், சிக்கல்களில் இருந்தும் சங்கத்தை மீட்டெடுப்பது கர்நாடக தமிழர்களின் கடமையாகும்.
தமிழ்ச் சங்கத்தின் அவல நிலைமை தொடர்வது கர்நாடகத் தமிழருக்கு பெரும் இன்னலாக அமையும். எனவே, பிரச்சனைகளில் இருந்து சங்கத்தை மீட்க ,வழி வகை காண்பதற்கு கோபாலகிருட்டிணனை ஒருங்கிணைப்பாளராகவும், ஆர்.எஸ்.மணி, எஸ். லாரன்ஸ்,ஏ.எஸ். ஸ்டாலின் ஜோசப் ஆகியோர் துணை ஒருங்கிணைப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டு பெங்களூரு தமிழ்ச் சங்கம் நலம் காப்போர் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு தமிழ்ச் சங்க வளாகத்தில் டிச.9-ஆம் தேதி காலை 11 மணிக்கு கலந்துரையாடல் நடத்த நலம்காப்போர் குழு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு நல்ல கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.