கடலோர கர்நாடகத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தின் உள்பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை பலவீனம் அடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கடலோர கர்நாடகத்தில் பரவலாகவும், தென் கர்நாடகத்தின் உள்பகுதிகளின் ஒரு சில பகுதிகளிலும் மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் குடகு மாவட்டத்தின் விராஜ்பேட்டில் 80 மி.மீ., பாகமண்டலாவில் 50 மி.மீ., வட கன்னட மாவட்டத்தின் ஹொன்னாவர், கார்வார், கேசில்ராக்கில் தலா 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வானிலை முன்னறிவிப்பு: இதேபோல், ஜூன் 19 முதல் 23-ஆம் தேதி வரை கடலோர கர்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக் கூடும். மழையின் அளவு 65 மி.மீ.க்கும் அதிகமாகவே காணப்படும். அதேபோல, கர்நாடகத்தின் உள்பகுதிகளின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழையும், வடகர்நாடகத்தின் சிற்சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தென் மேற்கு பருவ மழை வலுப்பெற்று வருவதால், கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் வடமேற்கு முதல் மேற்கு நோக்கி மணிக்கு 35-45 கி.மீ. வேகத்தில் காற்றுவீசிவருகிறது. இது மணிக்கு 55 கி.மீ. வேகம் அளவுக்கு கூடும் வாய்ப்புள்ளது. எனவே, கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
பெங்களூரில் மழை: அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன்காணப்படும். ஒருசில பகுதிகளில் காற்று, இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகப்பட்சமாக 29 டிகிரி மற்றும் குறைந்தப்பட்சமாக 21 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.