தனக்கு இப்போதும் சித்தராமையாதான் முதல்வர் என்று பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் புட்டரங்கன செட்டி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு சாமராஜ் நகரில் காங்கிரஸார் திங்கள்கிழமை அளித்த வரவேற்பை ஏற்ற பின்னர் புட்டரங்கனசெட்டி, "சாமராஜ்நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சித்தராமையா, தன்னை அமைச்சராக்குவதாக வாக்கு கொடுத்திருந்தார். சித்தராமையா, தனது வாக்குறுதிபடி நடந்துகொண்டுள்ளார். கர்நாடகத்தின் மற்றொரு தேவராஜ் அர்ஸாக சித்தராமையா விளங்குகிறார். கர்நாடக மக்களுக்கு முதல்வராக குமாரசாமி இருந்தாலும், எனக்கும் இன்னும் சித்தராமையாவே முதல்வர்.
பிற்படுத்தப்பட்டோர் சமுதாய மக்களுக்கு சேவை செய்வதற்காக வழங்கப்பட்ட வாய்ப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுகொண்டிருக்கிறேன். பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ஒன்றும் புதிதல்ல. மக்களுக்கு பயன் தரும் பல புதிய திட்டங்களை கொண்டுவருவேன். பிற்படுத்தப்பட்டோரின் வளர்ச்சிக்கு தொடர்ந்து உழைப்பேன் என்றார் அவர். அமைச்சரிந் இந்தப் பேச்சு மஜதவினரிடையே கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.