பெங்களூரில் வாகன நெரிசல் நிறைந்த பகுதிகளில் 125 நடைமேம்பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை தொம்மலூர், கஸ்தூரிபாசாலை, விஸ்வேஸ்வரய்யா அருங்காட்சியகத்தின் அருகே 3 நடை மேம்பாலங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பெங்களூரில் வாகனங்கள் அதிகரித்துள்ளதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் சாலைகளைக் கடக்கும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால், உயிரிழப்பது அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு வாகன நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் நடை மேம்பாலம் கட்ட முடிவு செய்து, அதன்படி தற்போது 3 நடை மேம்பாலங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு வாகன நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் 125 நடைமேம்பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். நடை மேம்பாலங்கள் தனியாரின் ஒத்துழைப்பில் கட்டப்படுவதால், மாநகராட்சிக்கு அதிக அளவில் நிதிச்சுமை ஏற்படுவதில்லை என்றார்.
நிகழ்ச்சியில் மேயர் சம்பத்ராஜ், துணை மேயர் பத்மாவதி நரசிம்மமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத்பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.