கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் சிருங்கேரி சாரதம்மா கோயிலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி வழிபாடு நடத்தினார்.
கடலோர கர்நாடகத்தில் இரண்டாவது நாளாக புதன்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள சிருங்கேரிக்கு சென்று அங்குள்ள சாரதம்மா கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
வேட்டி, சால்வை அணிந்திருந்த ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா, கட்சிமேலிடப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர் ஆகியோருடன் கோயிலுக்கு வந்திருந்தார். கோயிலில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பிறகு, சிருங்கேரி பீடத்தின் மடாதிபதி ஜெகத்குரு சங்கர்சார்யா பாரதிதீர்த்த மகா சந்நிதானத்தைச் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் உடனிருந்தனர். பாரதிதீர்த்த சந்நிதானத்துடன் ராகுல் காந்தி தனியாக ஆலோசனை நடத்தினார்.
பின்னர், சிருங்கேரி மடத்தில் உள்ள ராஜீவ் காந்தி சம்ஸ்கிருத பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றினார். அங்கிருந்த புறப்பட்ட ராகுல் காந்தி, சிருங்கேரியில் வட்ட காங்கிரஸ் அலுவலகத்தை திறந்துவைத்தார். அதன்பிறகு, ஹெலிகாப்டர் மூலம் சிக்மகளூரு வரும் ராகுல்காந்தி, அங்கு நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
பேளூர் வந்த ராகுல் காந்திக்கு கட்சியினர் உற்சாக வரவேற்புஅளித்தனர். அதன்பின்னர், ஹாசனில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்திலும் பேசினார். தனது இரண்டுநாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட ராகுல் காந்தி, மைசூரு சென்று அங்கிருந்து புதுதில்லி புறப்பட்டு சென்றார்.