எய்ட்ஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது; அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் தாயிடம் இருந்து குழந்தைக்கு எய்ட்ஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, சென்னையில் வியாழக்கிழமை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது:
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் தற்போது 16 மாவட்டங்களில் தாயிடம் இருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி வைரஸ் தொற்று பரவுவது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள மாவட்டங்களிலும் இந்த நிலையை அடைய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
எச்.ஐ.வி எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தன்னார்வத்துடன் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு சமூகத்தில் சம உரிமை அளிக்க வேண்டும் என்றார் அவர்.
தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் சி.நடராசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.