சென்னையில் குற்றங்களைத் தடுக்கும் வகையில் 21 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்த விவரம்:
சென்னையில் குற்றங்களைத் தடுப்பதற்கு காவல்துறை, பொதுமக்களுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருகிறது.
இதில் முக்கிய நடவடிக்கையாக கண்காணிப்பு கேமரா பொருத்தும்படி பொதுமக்களையும், தனியார் நிறுவனங்களையும் காவல்துறை அறிவுறுத்துகிறது. இதனால் வீடுகளில் தனியாக வசிப்போர் கூட கண்காணிப்பு கேமரா பொருத்த தொடங்கிஉள்ளனர்.
இதன் காரணமாக அண்மைக்காலமாக குற்றங்களில் ஈடுபடுவோரை போலீஸார், கண்காணிப்பு கேமரா மூலம் எளிதாக துப்பு துலக்கி அடையாளம் கண்டு கைது செய்கின்றனர். காவல்துறையின் இந்தத் தொடர் நடவடிக்கையின் காரணமாக சென்னையில் இப்போது 21 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.
சென்னையில் தியாகராய நகர் காவல் மாவட்டத்திலேயே அதிகப்படியாக 5,635 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தப்படியாக அடையாறு காவல் மாவட்டத்தில் 4,572 கண்காணிப்பு கேமராக்களும், பூக்கடை காவல் மாவட்டத்தில் 4,515 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
நகரிலேயே மிகவும் குறைவாக புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் 131 கண்காணிப்பு கேமராக்களும், அதற்கு அடுத்தப்படியாக திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் 544 கண்காணிப்பு கேமராக்களும், பரங்கிமலை காவல் மாவட்டத்தில் 766 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
6,733 கண்காணிப்பு கேராக்கள்: இதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, கண்காணிப்பு கேமராக்கள் வேறு எங்கெல்லாம் பொருத்தலாம் என காவல்துறை ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வின் முடிவில்,சென்னையில் 6,733 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
அந்த இடங்களில் தனியார் மூலம் கண்காணிப்பு கேமராக்களை 3 மாதங்களில் பொருத்துவதற்குரிய ஏற்பாடுகளை காவல்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.