மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் குறித்த புகைப்படக் கண்காட்சியை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சனிக்கிழமை தொடக்கி வைக்கிறார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் சனிக்கிழமை முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரையில் காலை 10 மணி முதல், மாலை 6 மணி வரையில் இலவசமாக அனுமதிக்கப்பட இருக்கிறது.
"மாறிவரும் தேசம்-மகாத்மாவின் கனவுகள் நனவாகும் நேரம்' எனும் இந்தக் கண்காட்சியை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து அத்துறை அதிகாரிகள் கூறியதாவது: காந்தியின் வாழ்க்கை வரலாறு, இங்கிலாந்து பயணம், அங்கு பாரிஸ்டர் பட்டம் பெற மேற்கொண்ட முயற்சிகள், தாயகம் திரும்பியோர் தென் ஆப்பிரிக்காவில் வழக்குரைஞராகப் பணிபுரியச் சென்ற போது ஏற்பட்ட அனுபவங்கள், சத்தியாகிரக போராட்டத்துக்கு அங்கு அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் போன்ற பல்வேறு ஆரம்பகால நிகழ்வுகளின் தொகுப்பு புகைப்படங்களாக காட்சிப்படுத்த உள்ளன. தொடுதிரை மூலம் காந்தியின் வாழ்க்கை வரலாறை அறிந்து கொள்ளவும், அகன்ற திரை தொலைக்காட்சி மூலம் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப்படங்களும் திரையிடப்படவுள்ளன என்றனர்.