பெண்ணை உயிருடன் எரித்துக் கொன்றது தொடர்பான வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் பல்கிஸ் பானு. இவருக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் 17 வயதுடைய தன் மகளுக்கு திருமணம் செய்ய பல்கிஸ் பானு முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் சனாவுல்லா (27) என்பவர், பல்கிஸ் பானுவின் மகளை தனது உறவினருக்கு திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்து, திருமண தேதியை முடிவு செய்துள்ளார்.
இந்தத் திருமணத்துக்கு பல்கிஸ் பானுவின் மகள் மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சனாவுல்லா, அந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்தபோது அவருடன் சண்டையிட்டு உள்ளார்.
அப்போதும், அப்பெண், சனாவுல்லா உறவினரை திருமணம் செய்ய மறுக்கவே, வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் ஊற்றி பெண்ணை எரித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை என்று நாடகமாடியுள்ளார்.
பல்கிஸ் பானுவின் மகள் அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆர்.கே.நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த 2013 -ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆர்.கலைமதி, சனாவுல்லாவுக்கு எதிரான குற்றசாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.