வியாபாரியிடம் வழிப்பறி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
கோடம்பாக்கம் அக்பராபாத் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்கேயன்(45). இவர் அந்தப் பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். கோடம்பாக்கம் ரயில்வே பார்டர் சாலையில் திங்கள்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த ஒரு நபர், கார்த்திகேயனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த செல்லிடப்பேசியையும், பணப் பையையும் பறித்துக் கொண்டு தப்பியோடினார். கார்த்திகேயன் சத்தம் போட்டதை அடுத்து அந்த நேரத்தில் அங்கு ரோந்துப் பணியில் இருந்த போலீஸார் உடனே அந்த நபரை விரட்டிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர், கோடம்பாக்கம் ஆஜிஸ்நகர் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த வடிவேலு என்ற ஸ்ரீதர்(36) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர்.