பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒருவாரமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை மாலை இடி-மின்னலுடன் தொடங்கிய கனமழை வெள்ளிக்கிழமைஅதிகாலை வரை கொட்டித் தீர்த்தது.
தொடர் மழை காரணமாக வறண்டு கிடந்த செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி ஏரியில் 101 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. (மொத்தக் கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி). ஏரிக்கு 186 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. 12 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கடந்த வாரம் செம்பரம்பாக்கம் ஏரியில் 73 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது. ஒரு வாரத்தில் 28 மில்லியன் கனஅடி நீர் அதிகரித்துள்ளது. மழை நீடிக்கும் பட்சத்தில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செம்பரம்பாக்கம் பகுதியில் வியாழக்கிழமை 50 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. புழல் ஏரி ஏற்கெனவே முற்றிலும் வறண்டு இருந்தது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக புழல் ஏரியில் நீர் இருப்பு 17 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரிக்கு 28 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரி பகுதியில் அதிக அளவு மழை இல்லை. இதனால் ஏரியில் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை. சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது.