சென்னை பாண்டி பஜாரில் உள்ள உணவகத்தில் ரூ.5.15 லட்சம் கையாடல் செய்ததாக இரு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சி.ஐ.டி. நகர் 2-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் உ.இப்ராஹிம்ஷா (48). இவர் பாண்டி பஜார் ஜி.என். செட்டிச் சாலையில் உணவகம் நடத்தி வருகிறார். இவரது உணவகத்தில் நந்தனம் பேன்ஸ்பிட் முதல் தெருவைச் சேர்ந்த செ.கௌரிசங்கர் (28), சி.ஐ.டி.நகர் 4-ஆவது பிரதான தெருவைச் சேர்ந்த ஜெ.ரகுமான்கான் (26) ஆகிய இருவரும் காசாளராக பணிபுரிந்தனர்.
இந்த நிலையில், அந்த உணவகத்துக்கு அண்மையில் வந்த ரூ.5.15 லட்சத்துக்கான காசோலையை, இருவரும் தங்களது வங்கி கணக்குகளுக்கு மாற்றி பண மோசடி செய்திருப்பது இப்ராஹிம்ஷாவுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர், பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கௌரிசங்கரையும், ரகுமான்கானையும் வியாழக்கிழமை கைது செய்தனர்.