சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி சார்பில் உலக எஸ்ட்ஸ் தின விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மனிதச் சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது. இதை மருத்துவமனையின் முதல்வர் பொன்னம்பல நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
உலக எய்ட்ஸ் தினம் டிச.1-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கடந்த 10 ஆண்டுகளாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் சுமார் 3 ஆயிரம் எய்ட்ஸ் நோயாளிகள் ஏஆர்டி கிளினிக்கில் இலவசமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மனிதச் சங்கிலி வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள், பயிற்சி செவிலியர் பங்கேற்றனர்.
எய்ட்ஸ் குறித்த கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் உறுதிமொழி ஏற்பும் கையெழுத்து பிரசாரமும் இடம்பெற்றது.
எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பாக செட்டிநாடு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் இளங்கோவன் பேசினார். துணை முதல்வர் செல்வி, மருத்துவர்கள் கி. தனசேகரன், ம. ரமேஷ், மற்றும் பால்வினை பிரிவு துறைத் தலைவர் பேராசிரியர் ம.மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.