பயணி ஒருவர் தவறவிட்ட உடைமைகளை பத்திரமாக மீட்டு திருப்பிக் கொடுத்த ரயில்வே பயணச் சீட்டு பரிசோதகருக்கு ரூ.2 ஆயிரம் சன்மானம் அளித்து பாராட்டு தெரிவித்தார் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்சிரேஷ்டா.
இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு - சென்னை இடையே இயக்கப்படும் சென்னை மெயில் ரயிலில் பயணி ஒருவர் தனது உடைமைகளை நவ. 22 ஆம் தேதி தவறவிட்டுள்ளார். அப்போது அந்த உடைமைகளை பேசின் பிரிட்ஜில் கண்டெடுத்துள்ளார் ரயில் பயணச் சீட்டு பரிசோதகரான பிரேந்திர குமார்.
பயணி தவறவிட்ட பையில் விலை உயர்ந்த பொருள்களும், பணமும் மற்றும் முக்கியமான ஆவணங்களும் இருந்துள்ளன. இதை மீட்ட பிரேந்திர குமார், தனது உடைமையை தொலைத்த பயணிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, பயணியிடம் அப்பொருள்கள் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டன.
பயணிக்கு உதவிய பிரேந்திர குமாரை நேரில் அழைத்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்டிரேஷ்டா பாராட்டு தெரிவித்தது மட்டுமின்றி, அவருக்கு ரூ.2 ஆயிரம் சன்மானமும் அளித்தார்.