சென்னை, ராஜீவ்காந்தி சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் பிரபல திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
தமிழ் திரைப்படத் துறையில் இயக்குநராக இருப்பவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் "மின்னலே', "வாரணம் ஆயிரம்', "காக்க...காக்க', "வேட்டையாடு விளையாடு', "நீதானே என் பொன்வசந்தம்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
அவர் புதன்கிழமை நள்ளிரவு தனது விலை உயர்ந்த காரில் மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்தார். சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணை பகுதியில், சாலை நடுவே திடீரென லாரி ஒன்று திரும்பியது. இதனால் நிலைத்தடுமாறிய கெüதம் வாசுதேவ் மேனின் கார் லாரி மீது மோதியது. இதில் கெüதம் மேனனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் கெüதம் மேனனை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் அங்கு புறநோயாளியாக சிகிச்சைப் பெற்று திரும்பினார். கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.