குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 97 வயது முதியவருக்கு இலவசமாக இடுப்பு மூட்டு மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
திருவான்மியூர் வால்மீகி நகர் திருவீதி அம்மன் தெருவைச் சேர்ந்த இசைக் கலைஞர் எஸ்.ராமச்சந்திரனின் தந்தை டி.ஆர்.சுப்ரமணியம் (97). இவர் அண்மையில் குளியலறைக்குச் செல்லும்போது, தவறி விழுந்தார்.
தனியார் மருத்துவமனையில் உடனடியாக அவர் அனுமதிக்கப்பட்டபோது, இடுப்பு மூட்டு முறிந்து இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். வருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், நுரையீரல் சளிக் கோளாறு, முதுமை ஆகிய காரணங்களினால் இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய இயலாது என்றும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் கூறினர்.
இதையடுத்து, அவரது உடல் நலம் குறித்து ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி முதல்வர் டி.ஆர்.குணசேகரன், முடநீக்கீயல் துறை சிறப்புப் பேராசிரியர் ஜி.சுந்தரேசன், துறைத் தலைவர் ஏ.எஸ்.சிவகுமார், மருத்துவக் கண்காணிப்பாளர் சசிகுமார், மயக்கவியல் மருத்துவர் செல்வமணி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதன் பின்னர், சுப்ரமணியம் பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்பட்டு, ஜி.சுந்தரேசன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கடந்த வியாழக்கிழமை சுமார் 1 மணி நேரம் இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.
தற்போது மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வரும் டி.ஆர்.சுப்ரமணியத்திற்கு ஒரிரு நாள்களில் நடக்கும் பயிற்சி அளிக்க உள்ளனர்.
இந்த நிலையில், அவரது பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு இந்தச் சிகிச்சையை இலவசமாக மேற்கொள்ள கல்லூரித் தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகனின் அனுமதித்துள்ளார்.