கொடுங்கையூர் தீ விபத்து: கட்டட உரிமையாளரை தேடும் போலீஸார்

கொடுங்கையூரில் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் உரிமையாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கொடுங்கையூரில் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் உரிமையாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் பிரதான சாலையில் நித்யானந்தம் என்பவருக்குச் சொந்தமான இரு தளங்களுடன் கூடிய வணிகக் கட்டடம் உள்ளது.
இந்த கட்டடத்தின் தரைத்தளத்தில் ஆனந்தன் என்பவர் பேக்கரி நடத்தி வந்தார். கடந்த சனிக்கிழமை நள்ளிரவு அந்தக் கடையில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவினால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ விபத்தில், அங்கு தீயை அணைக்கச் சென்ற ஏகராஜ் என்ற தீயணைப்பு வீரர் பலத்த காயமடைந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். அதேபோல தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு படை வீரர்கள், போலீஸார், தீ விபத்தை வேடிக்கை பார்த்த பொதுமக்கள் என 47 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேவேளையில் இச் சம்பவம் குறித்து கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், அந்த கட்டடத்தில் தீயணைப்புத்துறை விதிமுறைகள் பின்பற்றாமல் இருந்ததும், மாநகராட்சி விதிமுறைகளைப் பின்பற்றி கட்டடம் கட்டப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீஸார் கட்டடத்தின் உரிமையாளர் நித்யானந்தத்தைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com