ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் கிண்டி பொறியியல் கல்லூரியில் ஒரே துறையில் இடம் தேர்வு செய்து, சேர்க்கை பெற்றுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பொறியியல் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கையில் பங்கேற்று தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த திருப்பூரைச் சேர்ந்த ஹரி விஷ்ணுவும், அவருடைய சகோதரர் ஹரி விக்னேஷும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் ஆவர். அறுவை சிகிச்சைக்குப் பின் இருவரும் உடல் ரீதியாகப் பிரிக்கப்பட்டனர்.
இதில் ஹரி விக்னேஷ் தரவரிசைப் பட்டியலில் 440-ஆவது இடம் பிடித்திருந்தார். இவர்கள் இருவரும் கிண்டி பொறியியல் கல்லூரியில் பி.இ. மின்னியல் மின்னணுவியல் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்து, சேர்க்கை பெற்றுள்ளனர். இவர்களுடைய தந்தை மனோகரன் திருப்பூரில் அச்சகம் நடத்தி வருகிறார்.
இதுகுறித்து ஹரி விஷ்ணு கூறுகையில், இருவரும் ஒரே பிரிவில் படிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பமாக இருந்தது. எனவே, முதலில் மின்னியல் மின்னணுவியல் பிரிவைத் தேர்வு செய்தேன். ஆனால், எனது சகோதரர் 440-ஆவது ரேங்க் என்பதால், அந்தத் துறை கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக இருவரும் ஒரு துறையில் இப்போது சேர்ந்திருக்கிறோம் என்றார்.