நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து, விலை மதிப்பில்லா உயிரைக் காக்கும் பணியை மேற்கொள்ளும் நீங்கள், மருத்துவத்துறைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் எஸ்.கீதாலட்சுமி வலியுறுத்தினார்.
வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் தாகூர் மருத்துவக்கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் 138 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி அவர் மேலும் பேசியது: இந்தக் கல்லூரியில் மருத்துவக்கல்வி பயின்ற மாணவி எஸ்.கற்பகவள்ளி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் தேர்ச்சித் தரப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்று பெருமைசேர்த்து இருப்பது பாராட்டுக்குரியது.
இதர துறைகளைப் போன்று மருத்துவத்துறையிலும் நிகழ்ந்து கொண்டு இருக்கும் தொழில்நுட்ப மாற்றங்களைப் புரிந்து கொண்டு, அவற்றை எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்திக் கொள்ளுங்கள். நோய் கண்டுபிடிப்பு, சிகிச்சை முறை ஆகியவற்றில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், முன்னேற்றங்கள் குறித்த மருத்துவ அறிவாற்றலைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ளுங்கள். மருத்துவ ஆராய்ச்சி நடவடிக்கைகளில் கவனம் செலுத்துங்கள். மருத்துவக் கல்லூரி,ஆசிரியர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மருத்துவத் தொழிலின் மதிப்பு, மரியாதையை உயர்த்துங்கள் என்றார் அவர்.
விழாவில், பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று,15 தங்கப்பதக்கங்கள் வென்ற மாணவி எஸ்.கற்பகவள்ளி, முதுநிலை மருத்துவப்படிப்புக்கான தேர்வில் அகில இந்திய அளவில் 15 ஆவது இடத்தைப் பெற்ற மாணவர் வி.எஸ்.வெங்கடேஷ் ஆகியோருக்கு ரொக்கப்பரிசு,பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தாகூர் மருத்துவக்கல்லூரி நிர்வாக அறங்காவலர் பேராசிரியர் எம்.மாலா, முதல்வர் எஸ்.சாந்தா, டீன் என்.குணசேகரன், மருத்துவக் கண்காணிப்பாளர் ஆர்.திருநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.