சென்னை மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கான கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ்(NEEDS) , சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.டி.ஐ., பட்டயப்படிப்பு, இளநிலை பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்த, தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வுக் குழுவால் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவோருக்கு ஒரு மாதம் தொழில் பயிற்சி அளிக்கப்படும். மேலும், அவர்கள் தொழில் தொடங்க, திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை) முதலீட்டு மானியமும், 3 சதவீதம் வட்டி மானியத்திலும் வணிக வங்கிகள், தாய்கோ மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை கடன் வழங்கப்படும்.
இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு ''மண்டல இணை இயக்குநர், திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32'' என்ற முகவரியில் நேரிலோ, 044-2250 1620, 21, 22 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.