தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ்படித்தவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது தொடர்பாக சட்ட ரீதியான பிரச்னைகள் ஏதேனும் வந்தால் அதனை சந்திக்கத் தயாராக உள்ளதாக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
இது தொடர்பாக சென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாடு பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீதமும் சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற பாடத்திட்டங்களில் படித்தவர்களுக்கு 15 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
இவற்றில் தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் 69 சதவீத வகுப்பின இட ஒதுக்கீடு பின்பற்றப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த ஆண்டில் இருந்து 4 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும்.
மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக சட்ட ரீதியான பிரச்னைகள் ஏதும் எழுந்தால் அரசின் தரப்பில் அனைத்து விளக்கங்களையும் அளிக்கத் தயாராக இருக்கிறோம். நீதிமன்றமும் அரசுத் தரப்பு விளக்கங்களை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறேன்.
நீட் கேள்வித்தாள்களை ஆய்வு செய்து, அதில் மாநிலப் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் இருந்தது உறுதி செய்யப்பட்ட பின்புதான், மாநில அரசின் சார்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் குழு நிர்ணயித்துள்ளது.
அதிகக் கட்டணம் பெறுவது குறித்து ஏதேனும் புகார் இருந்தால் அதனை மருத்துவக் கல்வி இயக்ககத்துக்குத் தெரிவிக்கலாம். இந்திய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.