வனப் பகுதிகளை கண்காணிக்க இனி ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
சென்னையை அடுத்த நன்மங்கலத்தில் உள்ள தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்ட அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உலக உயிர்பன்மை தின விழாவில் அவர் மேலும் பேசியதாவது:
வனப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த ஆளில்லா விமானங்களை பயன்படுத்தத் திட்டமிட்டப்பட்டுள்ளது. முதல்கட்டமாக தற்போது நன்மங்கலம் வனப்பகுதியில் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள மிக முக்கியமான 25 உயிர்ப்பன்மை பகுதிகளில் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையும் ஒன்றாகும். இந்தியாவில் உள்ள தாவர வகைகளில் மூன்றில் ஒரு பகுதி தமிழகத்தில் காணப்படுவதால், அண்டை மாநிலங்களைக் காட்டிலும் நம் மாநிலத்தில் உயிர்ப்பன்மை வளம் அதிகம் என அறியப்படுகிறது. இந்த வளங்களைப் பாதுகாப்பது மிக அவசியம்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் அனைத்திலும் பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள் உருவாக்கப்படுதல் அவசியமாகும். இதுவரை 16 பல்லுயிர் மேலாண்மை குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
இந்த நிகழ்வில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் முகமது நஜிமுதீன், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (துறைத் தலைவர்) பசவராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.