சென்னையை மேம்படுத்துவதும் பராமரிப்பதும்தான் சவால்கள் என்று வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை தொழில், வர்த்தகக் கூட்டமைப்பு சார்பில் ''சென்னை ஓர் உலகளாவிய நகரம்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை தொழில், வர்த்தகக் கூட்டமைப்பின் தலைவர் ராம் வெங்கடரமணி தலைமை வகித்தார். வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் எஸ்.கிருஷ்ணன் கருத்தரங்கைத் தொடக்கி வைத்துப் பேசியது:
சென்னை உலகளாவிய நகரம் என்ற பெருமையை ஏற்கெனவே பெற்றுவிட்டது. அதை மேம்படுத்தவும், பராமரிப்பதும்தான் நம்முன் உள்ள சவால்கள். தொழில், வர்த்தக சங்கங்கள் நகர்ப்புற வளர்ச்சிக்குப் பெரும் உதவிகரமாக உள்ளன. நகர்ப்புற வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக
''2023 திட்டத்தில்'' நகர்ப்புறங்களின் உள்கட்டமைப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துத் துறையினரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் நம் இலக்கை எளிதில் அடையலாம் என்றார்.
இதைத் தொடர்ந்து, நகர்ப்புற வளர்ச்சி தொடர்பாக பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது.
தேசிய நகர்ப்புற விவகாரங்களுக்கான கல்வி நிலைய இயக்குநர் ஜெகன் ஷா, சென்னை ஐஐடி பேராசிரியர் ரவீந்திரா கீத்து, சென்னை தொழில், வர்த்தக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கே.சரஸ்வதி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.