சென்னையில் பேருந்தில் பயணம் செய்த வடமாநிலத்தைச் சேர்ந்த பயணியிடம் 1.8 கிலோ எடையுள்ள தங்கக் கட்டியை யாரோ திருடிச் சென்றனர். இது தொடர்பான புகாரின்பேரில் பூக்கடை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை, செüகார்பேட்டை என்.எஸ்.சி. போஸ் சாலையைச் சேர்ந்தவர் ஹிதேஷ் (30). வடமாநிலத்தைச் சேர்ந்த இவர், சென்னை வால்டாக்ஸ் சாலையிலுள்ள நகைப் பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். இவர் நகை செய்வதற்காக ஹைதராபாத்துக்கு சென்ற அவர் 1.8 கிலோ தங்கக் கட்டிகளை வாங்கிக் கொண்டு சென்னைக்கு பேருந்தில் வந்தாராம். பேருந்தில் தூங்கியவாறு வந்த அவர், சென்னை பிராட்வே நிறுத்தம் வந்தபோது விழித்தபோது அவர் பையில் வைத்திருந்த 1.8 கிலோ தங்கக் கட்டியை காணவில்லையாம். இச்சம்பவம் குறித்து ஹிதேஷ் பூக்கடை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாரை அடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.