மாணவர்களை நன்னெறிப்படுத்த ஒüவையாரின் ஆத்திசூடி, திருவள்ளுவரின் திருக்குறளை கற்றுக் கொடுக்க வேண்டும் என சிவாலயம் ஜெ.மோகன் வலியுறுத்தினார்.
"தினமணி' நாளிதழ், சென்னை கொடுங்கையூரில் உள்ள ஸ்ரீசாயி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் மாணவர் இலக்கிய மன்ற விழாவை வெள்ளிக்கிழமை நடத்தின.
இந்த விழாவில், பள்ளி மாணவ-மாணவியர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், உலக நீதி, வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி போன்றவற்றை பாடினர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சிவாலயம் ஜெ.மோகன், சிறப்பாகப் பாடிய மாணவ-மாணவியருக்குப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார்.
பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசியது: மாணவர்கள் சிறு வயதிலேயே மனனம் செய்து ஆத்திசூடி போன்றவற்றை பாடியது மிகவும் பாராட்டுக்குரியது. இளம் வயதில் உச்சரிப்புப் பிழை இல்லாமல் தமிழைப் பேசுவது தமிழ் என்றும் மேம்படும் என்பதற்குச் சிறந்த உதாரணம்.
போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மாணவ-மாணவியரும் ஒüவையார், திருவள்ளுவர் போன்றவர்களையும், அவர்களின் படைப்புகளையும் நன்கு கற்றறிந்து நல்லொழுக்கம் உள்ளவர்களாகத் திகழ வேண்டும் என்றார்.
இந்த விழாவில், ஸ்ரீசாயி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் டி.எஸ்.தியாகராஜன், கவிஞர் ஜீவ பாரதி, நர்மதா பதிப்பக உரிமையாளர் டி.எஸ்.ராமலிங்கம், டாக்டர் வாசுகி கண்ணப்பன், பள்ளியின் தலைமை ஆசிரியர் டி.எல்.சுந்தரதாஸ், சிட்கோ முன்னாள் பொது மேலாளர் திரிபுரசுந்தரம், அ.ச.ஞானசம்பந்தன் மாணவர் இலக்கிய மன்றச் செயலாளர் மாணவி மா.யாழினி, ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மாணவ-மாணவியர் திரளானோர் பங்கேற்றனர்.