சென்னை அண்ணா சாலையில் உள்ள 168 ஆண்டு காலப் பழைமையான அரசு மதராஸா மேல்நிலைப் பள்ளிக் கட்டடம் மழையின் காரணமாக திங்கள்கிழமை இடிந்து விழுந்தது.
சென்னையின் பழைமையான பள்ளிகளில் ஒன்று மதராஸா அரசு மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியின் பழைய கட்டடம் பாரம்பரியக் கட்டடமாக கருதப்படுகிறது. பள்ளியின் வகுப்புகள் புதிய கட்டடத்தில் இயங்கி வருகின்றன. எனினும் பாரம்பரியக் கட்டடம் அப்படியேதான் உள்ளது.
168 ஆண்டுகால பழைமையான இக்கட்டடம் பாழடைந்து காணப்படுகிறது. அரசு இதை பராமரிக்க வேண்டும் என்று முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழை காரணமாக இக் கட்டடம் திடீரென பலத்த சப்தத்துடன் திங்கள்கிழமை இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.