சர்வதேச மின்னியல், மின்னணுவியல் பொறியாளர்கள் அமைப்பின் தலைவர்கள் குழு உறுப்பினராக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட பாரத் பல்கலைக்கழக இணைப் பதிவாளர் ஆர்.ஹரிபிரசாத்துக்கு பாரத் பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை பாராட்டுவிழா நடத்தப்பட்டது.
சர்வதேச அளவில் 161 நாடுகளைச் சேர்ந்த 4 லட்சத்து 20 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட மின்னியல், மின்னணுவியல் பொறியாளர்கள் அமைப்பின் மாநாடு கடந்த மாதம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்றது.
அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட 31 நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள், தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பொறியாளர்கள் பங்கேற்ற மாநாட்டில், 5 தலைவர்கள் அடங்கிய
குழுவின் உறுப்பினராக ஆர்.ஹரிபிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு சென்னையை அடுத்த சேலையூரில் அமைந்துள்ள பாரத் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவில் பல்கலைக்கழக துணை இணை வேந்தர் கே.பி.தூயமணி, முதல்வர் ஜெ.ஹமீது உசேன், தேர்வு கண்காணிப்பாளர் பிரேம் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.