சென்னை டி.ஜி.வைஷ்ணவக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு தொடர்பான மனிதச் சங்கிலி அரும்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.3) நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மாணவர்கள், 'நீரின்றி அமையாது உலகு', 'இயற்கையைப் பாதுகாப்போம் மழைவளம் பெருக்குவோம்' போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.
இதையடுத்து பொதுமக்களுக்கு மழை நீர் சேகரிப்பு தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
கல்லூரியின் நுழைவாயில் அருகே தொடங்கிய மனிதச் சங்கிலி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அண்ணா வளைவு, பாஞ்சாலியம்மன் கோயில் வரை நீண்டது. இந்தப் பேரணியில் கல்லூரியின் நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர்கள் டி.எஸ்.பிரேமா, பா.விஜயகுமார், டி.உமாபதி, ப.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.