பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உபயோகமற்று நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பழுதடைந்த வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை, டெங்கு பரவாமல் தடுக்க நில வேம்பு குடிநீரை இலவசமாக வழங்குதல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து மண்டலங்களிலும், சாலையோரமாக தனிநபர்களின் பல இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சொந்தமான கனரக வாகனங்கள் ஆண்டுக்கணக்கில் உபயோகமில்லாமல் பழுதடைந்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மழைக் காலங்களில் அவற்றில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா நோய்கள் உருவாகுவதற்கு மூலகாரணமாக அமைகின்றன என பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் தெரிய வருகிறது.
எனவே, வாகன உரிமையாளர்கள் அவர்களுடைய உபயோகமற்ற, பழுதுபட்ட வாகனங்களை ஒருவார காலத்திற்குள் அப்புறப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறினால் பெருநகர சென்னை மாநகராட்சி உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ஆணையர் தா.கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.