கோயிலுக்குச் சொந்தமான இடத்துக்குப் பட்டா கோரி தொடரப்பட்ட வழக்கில், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி, மனுதாரரின் கோரிக்கையை சட்டத்துக்குட்பட்டு பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆந்திர மாநிலம் அமராவதி ஸ்ரீஅமரேஸ்வர கோயில் மற்றும் ஸ்ரீ சதவர்த்தி மடத்தின் சார்பில் அதன் செயல் அதிகாரியான ஸ்ரீனிவாச ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தாலுகா தாழாம்பூரில் தங்களது கோயிலுக்குச் சொந்தமான நிலத்துக்கு முன்னாள் அறங்காவலர்கள் பட்டா பெற தவறி விட்டனர். தற்போது அந்த நிலத்துக்கு பட்டா கோரி கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து பலமுறை தமிழக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தப் பதிலும் இல்லை. எனவே, பல கோடி மதிப்புள்ள அந்த நிலத்துக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி முன்பு வரும் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகி தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும். அதனை சட்டத்துக்கு உட்பட்டு அதிகாரி பரிசீலிக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.