தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள "மகளிர் மேளா 2017' நவராத்திரி விற்பனைக் கண்காட்சியை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் ஆகியோர் வெள்ளிக்கிழமை (செப்.15) தொடங்கி வைத்தனர்.
தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியது: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், கிராம அங்காடிகள், கல்லூரி சந்தைகள், வட்டார, மாவட்ட, மாநில அளவிலான கண்காட்சிகள் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளில் ரூ.6.6 கோடிக்கு உற்பத்திப் பொருள்கள் விற்கப்பட்டுள்ளன.
மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான விற்பனைக் கண்காட்சியில் 974 குழுக்கள் கலந்துகொண்டு ரூ.2.5 கோடி மதிப்பிலான பொருள்களை விற்பனை செய்து பலனடைந்துள்ளனர் என்றார்.
இந்தக் கண்காட்சி செப்.15 முதல் வரும் அக்டோபர் 14 வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் செயல்படும் பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பட்டு, பருத்தி ஆடைகள், செயற்கை ஆபரணங்கள், பல்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட கலைப் பொருள்கள், தரமான வீட்டு உபயோகப் பொருள்ளள், நவராத்திரி கொலுவில் வைப்பதற்கான அழகான பொம்மைகள், உணவுப் பொருள்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
கண்காட்சி தொடக்க விழாவில், மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பிரவீண் பி.நாயர், புதுவாழ்வுத் திட்டத்தின் கூடுதல் திட்ட இயக்குநர்கள் ஜா.சம்பத், சு.சிநேகலதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.