அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் தடயவியல் மருத்துவத் துறை இருக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரும், தடயவியல் நிபுணருமான ஏ.எட்வின் ஜோ கூறினார்.
சென்னை போரூர் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் துறையின் வெள்ளி விழா மற்றும் முன்னாள் மாணவர் கழகம் தொடக்க விழா ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் டாக்டர் ஏ.எட்வின் ஜோ பேசியது:
தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் தடயவியல் மருத்துவத் துறை கட்டாயமாக இருக்க வேண்டும்.
அப்போதுதான் எல்லா மருத்துவ சட்ட வழக்குகளிலும் உள்ளூரிலேயே தடயவியல் நிபுணர்களின் அறிக்கையைப் பெற முடியும். இதனால் வழக்குகளில் தேவையற்ற அலைச்சல் தவிர்க்கப்படும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளிலேயே ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் மட்டும்தான் அரசு சார்பில் பிரேதப் பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
பல்கலைக்கழக இணைவேந்தர் ஆர்.வி.செங்குட்டுவன், துறைத் தலைவர் டாக்டர் சம்பத்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.