சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம், ஆவடி பெருநகராட்சி, திருவேற்காடு நகராட்சி, வெள்ளானூர் ஊராட்சி பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அம்பத்தூர் சி.டி.எச். சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் 7 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட பகுதிகளில் சாலைகளில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இந்த பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது.
இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவுகிறது. ஆவடி பெரியார் நகரில் கடந்த 13-ஆம் தேதி கலா என்ற பெண் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்.
அவரது குடும்பத்தினரை சந்தித்த ஆவடி சுகாதார அதிகாரி, யாரேனும் கேட்டால் டெங்குவால் உயிரிழந்ததாக சொல்லவேண்டாம் என கூறிவிட்டுச் சென்றாராம். டெங்கு காய்ச்சல் பாதிப்பை மறைக்கவே அதிகாரிகள் முயலுகின்றனர்.
எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக அம்பத்தூர், ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் குப்பைகளை அகற்றி நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.