சிலை கடத்தல் வழக்குகள்: விசாரிக்கக் குழு அமைப்பு
சிலை கடத்தல் வழக்குளை விசாரிக்க ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் 17 பேர் கொண்ட குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆறு பஞ்சலோக சிலைகளை, டி.எஸ்.பி. காதர்பாஷா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சர்வதேசக் கடத்தல் கும்பலிடம் விற்றுவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
இதைப்போல், தஞ்சாவூர் பந்தநல்லூரில் உள்ள பசுபதீசுவரர் கோயில் சிலைகளை அறநிலையத்துறை அதிகாரிகளே திருடிவிட்டதாக ஆர்.வெங்கட்ராமன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகளை உயர் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன் மாணிக்கவேல், ரயில்வே பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணிமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமிப்பதாக உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
ஆனால், உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய முடியாது என்றும், ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், ரயில்வே ஜ.ஜி.யாக பணியாற்றுவதோடு, கூடுதல் பொறுப்பாக சிலை தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாகவும் தொடர்வார் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பொன் மாணிக்கவேல் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், அவருடன் இணைந்து பணியாற்ற 17 போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்து டிஜிபி சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 7 ஏ.டி.எஸ்.பி.க்கள் மற்றும் 10 டி.எஸ்.பி.க்கள் பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவில் இடம்பெறுவர்.
பொன் மாணிக்கவேலுடன் இணைந்து இந்த அதிகாரிகள் குழு, வரும் 18 }ஆ ம் தேதி முதல் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க உள்ளது எனவும் டிஜிபி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.