சென்னை காசிமேட்டில் விசைப்படகு உரிமையாளர் வீட்டில் 150 பவுன் நகை திருடிய வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
காசிமேடு அருகே உள்ள காசிமா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (52). இவர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப் படகு வைத்து மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 10 -ஆம் தேதி பாஸ்கர், குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு பெரியபாளையம் கோவிலுக்குச் சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பாஸ்கர் வீட்டின் கதவு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 150 பவுன் தங்கநகை, ரூ.12 லட்சம் ஆகியவற்றை திருடினர்.
இதுகுறித்து, காசிமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸாரின் தீவிர விசாரணையில், திருவொற்றியூர் ஒண்டிகுப்பத்தை சேர்ந்த ஜெயசீலன் (27), அவரது கூட்டாளி மாதவரத்தை சேர்ந்த எழில்(எ) எழிலேந்தி (35) ஆகிய இருவரும்தான் திருட்டில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார், அவர்கள் இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலீஸார் 100 பவுன் திருட்டு நகைகளை மீட்டனர். எஞ்சிய நகைகளையும், பணத்தையும் மீட்பதற்குரிய நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.